வெள்ளக் கட்டுப்பாட்டு மையத் திட்டத்துக்கு வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு

வெள்ளக் கட்டுப்பாட்டு மையத் திட்டத்துக்கு வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தை ஏற்க முடியாது: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை:வெள்ளக் கட்டுப்பாட்டு மையம் அமைக்கும் திட்டத்துக்கான டெண்டருக்கு வெளிநாட்டு வங்கி உத்தரவாதத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையின் உரிய தரவுகள் சேகரிப்பு மற்றும் வெள்ள கட்டுப்பாட்டு மையம் அமைப்பதற்காக டெண்டர் கோரப்பட்டது. இதற்கு சேலத்தை சேர்ந்த எஸ்.எஸ்.டெக் என்ற நிறுவனமும் விண்ணப்பித்திருந்தது. டெண்டரின்போது செலுத்த வேண்டிய வங்கி உத்தரவாத தொகைக்காக இங்கிலாந்தைச் சேர்ந்த வங்கியை அந்த நிறுவனம் இணைத்திருந்தது. இதனையடுத்து, இந்த உத்தரவாதத்தை அரசு ஏற்க மறுத்தது. இதனை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் சி.கதிரவன் ஆஜராகி, "டெண்டரின்போது உத்தரவாத தொகைக்காக வெளிநாட்டு வங்கியை இணைத்தால் அந்த வங்கியின் கிளை இந்தியாவில் செயல்பட வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், அந்த உத்தரவாதத்தை ஏற்க முடியாது. அல்லது, உள்ளூரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை அந்த நிறுவனம் பின்பற்றவில்லை" என தெரிவித்தார்.

இதற்கு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தங்களுடைய வசதிகேற்ற வகையில்தான் வெளிநாட்டு வங்கியின் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. எனவே, உத்தரவாதம் நிராகரிக்கப்பட்டது தவறு" என்று வாதிட்டார். இதையடுத்து, எஸ்.எஸ். டெக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, அரசின் நிபந்தனைகளை மனுதாரர் நிறுவனம் உரிய முறையில் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in