Last Updated : 03 Oct, 2023 08:54 PM

 

Published : 03 Oct 2023 08:54 PM
Last Updated : 03 Oct 2023 08:54 PM

கோவையில் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு - நடந்தது என்ன?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி. அருகில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

கோவை: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கோவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இருந்தது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா குறித்தும் பேசியதால், பாஜக - அதிமுக கூட்டணியில் மோதல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக, கடந்த மாதம் 25-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் நடந்த அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் முடிவில், பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர பாஜக பல்வேறு வகைகளில் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கூட்டணி முறிவைத் தொடர்ந்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை புதுடெல்லியில் முகாமிட்ட கட்சியின் தேசிய தலைவர்களை சந்தித்ததார். அப்போது, அண்ணாமலைக்கு பாஜக மூத்த தலைவர்கள் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது.

மத்திய அமைச்சருடன் சந்திப்பு: இச்சூழலில், கோவை கொடிசியா அரங்கில் இன்று (அக்.3) நடந்த வங்கிக் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி ஆகியோர் திடீரென சந்தித்துப் பேசினர். எம்.எல்.ஏக்கள் மூவரும் மத்திய அமைச்சரிடம் மனுவை வழங்கினர். பாஜக - அதிமுக கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகம் என இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினர் கூறி வரும் சூழலில், அதிமுக எம்.எல்.ஏக்கள், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சரை சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பின்போது அரசியல் பேசவில்லை, கோரிக்கை மனுவைத்தான் அளித்தோம் என அதிமுக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தாலும், தற்போதைய அரசியல் சூழலில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அரசியல் பேசவில்லை: இதுதொடர்பாக முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்.எல்.ஏ கூறும்போது, ‘‘கடந்த மாதம் விவசாயிகளுடன் புதுடெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தோம். கொப்பரை தேங்காய் கொள்முதல் அளவை உயர்த்த வேண்டும், விலையை கூட்டித்தர வேண்டும், வருடம் முழுவதும் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தோம்.

இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய அமைச்சர் வந்திருந்தார். இதில் பங்கேற்க முன்னோடி வங்கியில் இருந்து எங்களை அழைத்தனர். நாங்களும் கலந்து கொண்டோம். தற்போதும் மத்திய அமைச்சரை சந்தித்து மனுவை அளித்து கோரிக்கையை நிறைவேற்றித் தர வலியுறுத்தினோம். நானும், எம்.எல்.ஏக்கள் ஏ.கே.செல்வராஜ், அமுல் கந்தசாமி, தென்னிந்திய தென்னை விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சக்திவேல் ஆகியோர் மத்திய அமைச்சரை சந்தித்தோம்.

இந்தச் சந்திப்பில் வேறு எந்த அரசியல் காரணமும் கிடையாது. கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. பொதுச்செயலாளர் தான் எந்த முடிவும் எடுப்பார். அரசியல் ரீதியிலான சந்திப்புக்கும் இதற்கும் தொடர்பில்லை. பொள்ளாச்சி முழுமையாக தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இரண்டரை வருடங்களாக விவசாயிகள் கஷ்டப்பட்டு வருகின்றனர். தமிழக அரசு எதுவும் செய்வதில்லை. அரசியல்பேச கட்சியில் முக்கிய தலைவர்கள் உள்ளனர். நாங்கள் எங்கள் தொகுதி மக்களுக்காக மட்டுமே சந்தித்து பேசினோம். அவர் நிதியமைச்சர், நாங்கள் எம்.எல்.ஏ என்ற அடிப்படையிலேயே சந்தி்த்தோம்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x