Published : 27 Sep 2023 05:24 AM
Last Updated : 27 Sep 2023 05:24 AM

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை: முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை

சென்னை தி.நகர் சரவணா தெருவில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். படம்: ம.பிரபு

சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் அதிபர்களின் வீடு, அலுவலகம் என 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தமிழகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் மணல் குவாரி அதிபர்கள், அவர்கள் தொடர்புடைய இடங்கள் என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ரியல் எஸ்டேட் தொழிலில் முறைகேடான பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ரியல் எஸ்டேட் தொழிலில்ஈடுபட்டுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை நடத்தினர்.

தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், ரியல் எஸ்டேட் அதிபருமான முக்கிய பிரமுகர் ஒருவர் சென்னைதியாகராய நகர் சரவணா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிறார். அவரது வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று காலை சென்றனர். வீடு பூட்டி இருந்ததால், அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். காலை 9 மணிக்கு பிறகு தொழிலதிபரின் உதவியாளர் வந்து கதவை திறந்தார். அதன்பிறகு சோதனைநடத்தப்பட்டது. தஞ்சாவூரில் உள்ளஅவரது வீடு, அலுவலகத்திலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதோடு, மணல் குவாரி தொடர்புடைய தொழில்களையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதேபோல, தியாகராய நகரில் வசிக்கும் அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் வீடு, அவரது கட்சி அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகம், அதன் துணை நிறுவனங்கள், மணல் குவாரிகள் எனதமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் சோதனை நடைபெற்றுள்ளது.

இந்த சோதனையில், மணல் குவாரிகள் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக ரியல்எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து, அதன்மூலம் கோடிக்கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

சோதனை குறித்து கேட்டபோது, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, தொழில் முதலீட்டுக்கான பணம் எந்த வகையில் திரட்டப்பட்டது? முதலீடு தொடர்பாக முறையான கணக்குகள் காட்டப்பட்டுள்ளதா? என்பதுதொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதில், சில நிறுவனங்கள் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான முகாந்திரம்கிடைத்தது. அதன் அடிப்படையிலேயே சோதனை நடந்து வருகிறது. சோதனை முழுமையாக முடிந்த பிறகு அதுகுறித்த தகவல் வெளியிடப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x