Published : 26 Sep 2023 03:45 PM
Last Updated : 26 Sep 2023 03:45 PM

கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி தனபால் பேச தடை விதிக்கக் கோரி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அதிமுகவின் பொதுச் செயலாளர் என்ற முறையில் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தனபால், இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பொய்யான தகவல்களை பொது வெளியில் கூறி வருகிறார்.

அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலின் பேரில் தனபால் இதுபோல பேட்டியளித்து வருகிறார். அவர் ஏற்கெனவே இந்த வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும், தான் மன நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றுள்ளார். எனவே, இந்த வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், கடந்த 2017-ம் ஆண்டு கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜ் சாலை விபத்தில் பலியானபோது, யாருக்கும் தொடர்பில்லை என அளித்த பேட்டிக்கு முற்றிலும் முரணாக, தன்னை தொடர்புபடுத்தி தற்போது பேசி வருவதாக வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆதாரங்களில் இருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தனபால் அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்பதற்கு ஆரம்ப கட்ட முகாந்திரம் உள்ளது. தொடர்ந்து இதுபோல பேசுவதற்கு அனுமதித்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு ஈடுகட்ட முடியாத இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறி, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனுவுக்கு, தனபால் வரும் அக்டோபர் 10-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x