Last Updated : 22 Sep, 2023 05:49 PM

4  

Published : 22 Sep 2023 05:49 PM
Last Updated : 22 Sep 2023 05:49 PM

110 கி.மீ வேகம், ரூ.2,000+ வரை கட்டணம்... நெல்லை - சென்னை ‘வந்தே பாரத்’ ரயில் அம்சங்கள் என்னென்ன?

மதுரை: நெல்லை - சென்னை இடையேயான ‘வந்தே பாரத்’ துரித பகல் நேர ரயில் சேவைக்கான முதல் பயணம் ஞாயிற்றுக்கிழமை (செப்.24) தொடங்குகிறது. இதையொட்டி இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

நாடு முழுவதும் 9 "வந்தே பார்த்" துரித ரயில்களின் சேவையை நாளை மறுநாள் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இதில் தெற்கு ரயில்வே பிரிவில் நெல்லை - சென்னை உட்பட 3 "வந்தே பாரத்" ரயில்களும் அடங்கும். இந்நிலையில், நெல்லை - சென்னை இடையிலான "வந்தே பாரத்" ரயில் சேவை நாளை மறுநாள் முதல் தொடங்குவதை ஒட்டி, இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

இன்று காலை 6 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சியில் தலா 5 நிமிடங்களுக்கும் மேல் நின்று சென்றது. மதியம் சுமார் 1.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடைந்தது. இதன்பின், மறு மார்க்கமாக 2.50 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லைக்கு இரவு 10.40க்கு வருகிறது. தொடர்ந்து நாளை தொடக்க விழாவுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ப. அனந்த், முக்கிய அதிகாரிகள், பி.ஆர்.ஓ கோபிநாத், முன்னாள் அலுவலர் ராதா மற்றும் நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் பயணித்தனர்.

பயணித்தின் போது, இந்த ரயிலின் பல்வேறு நவீன வசதிகள், பயண நேரம் குறித்து செய்தியாளர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர். பிற ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தைவிட இந்த ரயில் புதுவித சொகுசு பயணத்துக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன என்பதை எடுத்துரைத்தனர்.



மேலும், இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "தென் மாவட்ட பயணிகளுக்கென இந்த துரித ரயில் இயக்குவது வரவேற்கத்தக்கது. மதுரையில் இருந்து சுமார் 5 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றிடலாம். இந்த ரயில் இன்ஜினுடன் சேர்த்து 8 பெட்டிகளை கொண்டுள்ளது. எக்ஸிக்யூடிவ் பெ ட்டி ஒன்று, 7 சேர் கார் (சாதாரண ) சீட்களை கொண்ட பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

சேர் கார் பெட்டி ஒவ்வொன்றிலும் 78 சீட்டுகளும், எக்ஸிகியூட்டிவ் பெட்டியில் 52 சீட்டுகளும் என, மொத்தம் 535 சீட்டுகள் உள்ளன. குளிரூட்டி வசதி கொண்ட ஒவ்வொரு பெட்டியிலும் சிசிடிவிக்கள், பொழுது போக்குக்கென 2 எல்இடி டிவிக்கள், முதலுதவி பெட்டி, அனைத்து சீட்டிலும் செல்போன் சார்ஜர் வசதி, ரயிலில் பணியிலுள்ள ஓட்டுநர், பணியிலுள்ள (கார்டு) அதிகாரியை அவசரத்துக்கு தொடர்பு கொள்ள டிஜிட்டல் மைக் வசதி, தீயணைப்பான்கள், ஆபத்தான நேரத்தில் கண்ணாடியை உடைத்து வெளியேறு வதற்கான சாதனம் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகள் உள்ளன.

கழிப்பறை, பயணிகள் புகைப் பிடித்தால் உடனே எச்சரிக்கும் கருவி, கையால் தொட்டால் மின் விளக்கு எரிதல், திறக்கும் டிஜிட்டல் கதவுகள் உள்ளிட்ட மேலும் பல நவீன வசதிகள் இடம் பெறுகின்றன. சுடு தண்ணீர் , உணவு பொருட்களை வைக்க வசதி, பொருட்கள் வைப்பறைகளும் உள்ளன.

எக்ஸிக்யூட்டிவ் பெட்டியில் 2 இருக்கைகள் கொண்ட சீட்டுகளை 180 டிகிரியில் வேண்டிய திசையில் திருப்பிக் கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிறப்பு கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கழிப்பறை போகும்போது, கைக் குழந்தையை பாதுகாப்பாக உட்கார வைக்க, தனி இருக்கை உள்ளது.

ஒவ்வொரு சீட்டிலும் முன்பகுதியிலும் சாப்பிடுவதற்கென டேபிள் போன்ற வசதி இருக்கிறது. லேப்டாப் வைத்து பணி செய்யலாம். எல்லா பெட்டிகளுக்கும் தலா ஒரு உதவியாளர் நியமிக்கப்படுவர். இவர்கள் மூலம் பயணிகளுக்கு சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்படும். ரயிலின் வெளிபுறத்திலும் கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. வளைவான பகுதியில் செல்லும்போது, வெளிபுறத்தைக் கவனிக்க முடியும்.

இது தவிர ஓட்டுநர், கார்டு பகுதியிலும் முன்பகுதி, பின்பகுதியில் பட மெடுக்கும் கேமராக்கள் இடம் பெறுகின்றனர். இதன் மூலம் தண்டவாளப் பகுதியை கண்காணிக்கலாம். இன்ஜினுடன் கூடிய ஒவ்வொரு பெட்டியிலும் இன்ஜின் பொருத்தி இருப்பதால், துரித வேகம் கிடைக்கும். சுமார் 5 மணி நேரத்தில் மதுரையில் இருந்து சென்னைக்குப் போகலாம்.

சேர் கார், எக்ஸிக்யூட்டிவ் பெட்டி என, இரு பிரிவாக கட்டணம் நிர்ணயம் இருக்கும். சுமார் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவை செப்.24 ல் தொடங்கினாலும், 27 ஆம் தேதி முதல் மக்கள் பயணிக்கும் வகையில் முன்பதிவு அனுமதிக்கப்படும்" என்று கூறினர்.

சாரதாரண மக்கள் பயணிக்க முடியுமா? - இந்த ரயிலின் கட்டணம் விவரம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மதுரை - சென்னைக்கு குறைந்தபட்சம் ரூ.1,300 மேலும், அதிகபட்சம் எக்ஸிக்யூடிவ் பெட்டிக்கு) ரூ 2,000 வரை இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதன்மூலம் சாதாரண மக்கள் இந்த ரயிலில் பயணிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வர்த்தர்கள், அரசியல் பிரமுகர்கள் போன்ற வசதி படைத்தவர்கள் மட்டுமே பயணிக்க இயலும்.ஓரளவுக்கு நடுத்தர மக்களும் பயணிக்கும் விதமாக கட்டண விகிதம் இருந்தால் வசதியாக இருக்கும் என, அடிக்கடி ரயில் பயணம் செய்யும் மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x