Published : 22 Sep 2023 04:03 AM
Last Updated : 22 Sep 2023 04:03 AM

இயற்கை இடர்பாடுகளால் 7 லட்சம் ஏக்கரில் மகசூல் இழப்பு - சம்பா பயிர் பாதிப்புக்கு ரூ.560 கோடி இழப்பீடு

சென்னை: அரசின் பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டு சம்பா பருவ நெற்பயிரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு, தகுதி வாய்ந்த 6 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.560 கோடி இழப்பீட்டு தொகை வழங்கப்படும். இத்தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்பில் இருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, தமிழகத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022-23-ம் ஆண்டில் இத்திட்டம் 37 மாவட்டங்கள் அடங்கிய 14 தொகுப்புகளில் இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம், இப்கோ–டோக்கியோ, பஜாஜ் அலையன்ஸ், எச்டிஎஃப்.சி எர்கோ, ரிலையன்ஸ் பொது காப்பீடு ஆகிய நிறுவனங்களால் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் சம்பா நெற்பயிரில், 11.20 லட்சம் விவசாயிகளால் 24.45 லட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டது. மொத்த காப்பீட்டு கட்டணத்தில் தமிழக அரசின் காப்பீட்டு கட்டண மானியமாக ரூ.1,375 கோடி,மத்திய அரசின் காப்பீட்டு கட்டணமானியமாக ரூ.824 கோடி, விவசாயிகளின் பங்குத் தொகையாக ரூ.120 கோடி என காப்பீட்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.2,319 கோடி வழங்கப்பட்டது.

இந்நிலையில், 2022-23-ம்ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடியில் 46 லட்சம் டன் உற்பத்தி எட்டப்பட்டது. இருந்தபோதிலும், வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்த காரணத்தால் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்பட்ட மிதமான வறட்சியால் 3.53 லட்சம் ஏக்கர் பரப்பில் 33 சதவீதத்துக்கு மேல்பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.181.40 கோடியை தமிழக அரசு கடந்த செப்.4-ம் தேதி 1.87 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

இதைத் தொடர்ந்து, தற்போது பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ், அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், வறட்சி, வெள்ளம், புயல்,பருவம் தவறிய மழை போன்றபல்வேறு இயற்கை இடர்பாடுகளால் 7 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்புக்கு, திட்ட விதிமுறைகளின்படி பாதிப்படைந்த பகுதிகளுக்கு, தகுதி வாய்ந்த விவசாயிகள் 6 லட்சம் பேரின் வங்கிக் கணக்குகளில் இழப்பீட்டு தொகையாக மொத்தம் ரூ.560 கோடி வரவு வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x