Published : 22 Sep 2023 06:13 AM
Last Updated : 22 Sep 2023 06:13 AM

எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை: அண்ணாமலை கருத்து; பாஜக - அதிமுக இடையே சமரசம்

கோவை/மதுரை: எனக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். அதேபோன்று அதிமுகவுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே பிரச்சினை ஏதும் இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். இதன்மூலம் இரு கட்சிகளிடையே சமரசம் ஏற்பட்டு வருகிறது.

முன்னாள் முதல்வர் அண்ணா தொடர்பாக சமீபத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்து பேசியிருந்தார்.

அதற்கு எதிர்வினையாக அண்ணாமலை அளித்த பேட்டி இருகட்சிகளிடையே கடும் வார்த்தைப் போரை ஏற்படுத்தியது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்நிலையில் இரு கட்சி தலைவர்களிடையே சமரசம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் நேற்று அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலைக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை. பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் பிரச்சினை இல்லை. அதிமுகவில்உள்ள சில தலைவர்களுக்கும் அண்ணாமலைக்கும் பிரச்சினை இருக்கலாம்.

நான் யாரையும், எங்கேயும் தவறாக பேசவில்லை. எனது தன்மானத்தை கேள்விக் குறியாக்கினால் பதில் பேசுவேன். அது என் உரிமை. தன்மானத்தை விட்டுக்கொடுத்து அரசியல் செய்யமாட்டேன். எங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகள் வெவ்வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள்.

இயற்கையாக முட்டல், மோதல்கள் வருவது சகஜம். அதை தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதே எங்களை இணைக்கும் புள்ளி. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொல்வதுபோல், மத்தியில் மோடி, மாநிலத்தில் பழனிசாமி என்பதை நான் எப்படி சொல்ல முடியும். அதை தேசிய தலைவர்தான் சொல்ல முடியும். அது என் வேலை கிடையாது. தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்கு தலைவராக இருக்கிறேன்.

அதிமுகவில் 4 பேர் பேசியுள்ளனர். அவர்களின் தனிப்பட்ட ஒவ்வொரு பேச்சுக்கும், நான் பதில் கருத்து சொல்வது நன்றாக இருக்காது. பாஜக தேர்தலில் போட்டியிடும்போது பெறும் வாக்கு சதவீதம்தான் அதற்கு பதில்.

மது ஒழிப்புக்கு இலக்கணம் அண்ணா. குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரக்குறைவாக நான் விமர்சிக்கவில்லை. அண்ணா பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. சரித்திரத்தில் உள்ளதை தான் பேசுகிறேன் என்றார்.

இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அண்ணாமலையின் கருத்து, செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறோம். எங்களுக்கும் (அதிமுகவுக்கும்) மோடி, நட்டா, அமித்ஷா ஆகியோருக்கும் பிரச்சினையே இல்லை. அவர்கள் அதிமுவையும், எங்கள் பொதுச் செயலாளரையும் நன்றாக மதிக்கிறார்கள். அண்ணாமலை எங்களை விமர்சிக்கிறார் என்ற வருத்தத்தில்தான் அவரை மட்டுமே எதிர்க்கிறோம் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x