Last Updated : 14 Dec, 2017 10:11 AM

 

Published : 14 Dec 2017 10:11 AM
Last Updated : 14 Dec 2017 10:11 AM

எங்கள் வீட்டில் குடும்ப புகைப்படம்கூட இல்லை: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டரின் மகன் உருக்கம்

“என் அப்பா பணியில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால், எங்களுக்கு குடும்ப புகைப்படம் எடுக்கக்கூட நேரம் இல்லை” என்று இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் மகன் ரூபன் ப்ரியராஜ் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் ராஜஸ்தான் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஆவடி, வசந்தம் நகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா, மகன்கள் ரூபன் ப்ரியராஜ், ராகுல் ஆகியோர் கதறி அழுதது, அனைவரையும் கண் கலங்க வைத்தது.

பெரிய பாண்டியன் பற்றி அவரது மனைவி பானுரேகா கூறும்போது, “என் கணவர் வீட்டைப் பற்றி கவலைப்பட மாட்டார். இரவு பகல் பார்க்காமல் பணிபுரிவார். நகைக் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு ஏற்கெனவே சென்ற என் கணவர், 10 நாட்களாக அவர்களைத் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதனால் கடந்த வாரம் சென்னை திரும்பிய அவர், முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளதாகக் கூறி கடந்த 8-ம் தேதி மாலை ராஜஸ்தான் சென்றார். அவர் போகும்போது, அதிக போலீஸாருடன் போகுமாறு கூறினேன். ஆனால், அவர் நான்கைந்து பேருடன்தான் சென்றார்.

ராஜஸ்தானில் இருந்தபடி, தினந்தோறும் காலையில் என் கணவர்தான் போன் செய்து எங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடுவார். நேற்று காலை போன் செய்யும்போது, ‘கொள்ளையர்களை பிடிப்பதில் சிரமம் இருந்தால், வந்து விடுங்கள்’ என்றேன். அதற்கு அவர், ‘கொள்ளையர்களை பிடித்து விட்டுத்தான் வருவோம்’ என்றார். நேற்றுவரை என்னுடன் பேசிக்கொண்டிருந்த அவர், இன்று காலை போன் செய்யவில்லை. அப்போதே, ஏதோ தவறு நடந்திருப்பதாக எனக்குத் தோன்றியது. அதன் பிறகு, சோகச் செய்தி கிடைத்தது. கொள்ளையர்களைப் பிடிக்க என் கணவருடன் நிறைய காவலர்களை அனுப்பியிருந்தால், என் கணவர் உயிரிழந்திருக்க மாட்டார். அவர் உயிருடன் இருந்தால், இன்னும் ஆயிரம் வழக்குகளில் குற்றவாளிகளை கைது செய்திருப்பார்” என்றார்.

பெரிய பாண்டியனின் மூத்த மகன் ரூபன் ப்ரியராஜ் கூறும்போது, “என் அப்பா பணியில் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆகையால், எங்கள் வீட்டில் குடும்ப புகைப்படம் எடுக்கக்கூட நேரம் இல்லை. இன்றுவரை எங்கள் வீட்டில் குடும்ப புகைப்படம் இல்லை. ஊரில் நடக்கும் எந்த நிகழ்வுக்கும் என் தந்தை, எங்களோடு வரமாட்டார். சிறிது தாமதமாகத்தான் வருவார். அந்தளவுக்கு அவர், தன் பணியில் அதிக அக்கறை காட்டினார். நான் காவல்துறை அதிகாரியாக ஆகவேண்டும் என என் அப்பாவிடம் ஒருமுறை சொன்னபோது, அவர், ‘நீ காவல்துறைக்கு வரவேண்டாம். நல்லா படித்து வேறு வேலைக்கு போ’ என்றார். கடந்த 8-ம் தேதி என் அப்பா ராஜஸ்தானுக்கு செல்லும் போது, அவரை தெரு முனையில், ஜீப்பில்தான் கடைசியாக பார்த்தேன்” என்று கதறி அழுதார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x