Published : 20 Sep 2023 07:03 AM
Last Updated : 20 Sep 2023 07:03 AM

தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து தரம் இல்லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து சீல் வைக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி இரவு ஐவின் என்கிற உணவகத்தில் உணவு சாப்பிட்ட 42 பேர் வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக 17-ம் தேதி காலையில் அறிக்கை பெறப்பட்டது. கலையரசி என்னும் 14 வயது மாணவியும் இதில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த மாணவி 18-ம் தேதி இறந்ததாகத் தகவல் கிடைத்தது.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை கீழ்க்கண்டவாறு சமர்ப்பித்துள்ளார்.

உணவகம் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவிலிருந்து 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு சேலம் உணவு பகுப்பாய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கை இந்த வார இறுதியில் வரவுள்ளது. சந்தேகத்துக்குரிய 42 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன் உணவகத்தின் உணவுப் பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு, உணவகம் சீல் வைக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, ஷவர்மா மற்றும் சந்தேகத்துக்குரிய கிரில் சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ய நாமக்கல் மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறையுடன்இணைந்து கண்காணிக்க அமைக்கப்பட்ட 13 சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழு, தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து உணவுதரம் இல்லாத சூழலில் அபராதம் விதித்தல், உரிமத்தை ரத்து செய்து, கடைக்கு சீல் வைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

என்னுடைய (மா.சுப்பிரமணியன்) அறிவுறுத்தலின் பேரில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா உள்ளிட்ட எளிதில் கெட்டுப் போகக்கூடிய உணவுகளை ஆய்வு செய்ய நியமன அலுவலர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்தொடர்ச்சியாக நடைபெற்ற ஆய்வில் கெட்டுப் போன உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டும், நாமக்கல் மாவட்டத்தில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது.

எனவே, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வு குறித்துஅறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் நடந்த சம்பவத்துக்கான துறைரீதியான விளக்கம் கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x