Published : 01 Dec 2017 10:38 AM
Last Updated : 01 Dec 2017 10:38 AM

மதுசூதனன், மருதுகணேஷ், டிடிவி தினகரன்: முக்கிய வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் - தேர்தல் அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் இ.மதுசூதனன் (அதிமுக) என்.மருதுகணேஷ் (திமுக), டிடிவி தினகரன் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.

ஜெயலலிதா மறைவால் காலி யாக உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27-ம் தேதி தொடங்கியது. கடந்த 4 நாட்களில் சுயேச்சைகள், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் என 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் இன்று ஒரே நாளில் மனு தாக்கல் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு திமுக வேட்பாளர் என்.மருது கணேஷ், 12.30 மணிக்கு டிடிவி தினகரன், 1 மணிக்கு அதிமுக வேட்பாளர் இ.மதுசூதனன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் நேரம் ஒதுக்கியுள்ளது.

மதுசூதனன் மனு தாக்கல் செய்யும்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது. திமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ஒரே நாளில் 3 முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வதால் தேர்தல் அதிகாரி அலுவலகமான தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக வேட்பாளர் மருது கணேஷுக்கு காங்கிரஸ், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. திராவிடர் கழகம், முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் தலைமையிலான எம்ஜிஆர் கழகமும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x