Last Updated : 25 Dec, 2017 10:05 AM

 

Published : 25 Dec 2017 10:05 AM
Last Updated : 25 Dec 2017 10:05 AM

மாணவர்களின் புரிதலுக்காக நாடகம் வாயிலாக கணிதம் கற்பித்தல்: கோட்டுச்சேரி அரசுப் பள்ளி ஆசிரியரின் புதுமை முயற்சி

பெரும்பாலான மாணவர்களால் கடினம் எனக் கருதப்படும் கணிதப் பாடத்தை மாணவர்களுக்கு எளிமையாக புரிய வைக்க வேண்டும் என்பதற்காக கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், நாடகம் மூலம் கணிதம் கற்பிக்கும் முயற்சியை கையாண்டு வருகிறார்.

கணிதப்பாடம் இன்றும் பல மாணவர்களுக்கு புரியாத ஒன்றாகவே உள்ள நிலையில், கணிதக் கருத்துகளை (Mathametical concepts) காட்சி மற்றும் செயல் வடிவத்தைக் கொண்டு கற்பிக்கும்போது மாணவர்கள் புரிதலுடன் கற்கிறார்கள் என்று கூறுகிறார் காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியின் பட்டதாரி கணித ஆசிரியர் சு.சுரேஷ்.

மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் நாட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கணித ஓவியப் போட்டி, கணித பாட்டுப் போட்டி, கணிதக் கண்காட்சி, கணிதப் பட்டறை, பெருக்கல் வாய்ப்பாடு ஒப்பிக்கும் போட்டி என பலவித முறைகளை தனது கற்பிக்கும் முறையில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த இவர், தற்போது நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை புதிதாக மேற்கொண்டுள்ளார்.

அண்மையில் கோட்டுச்சேரி வ.உ.சிதம்பரனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் இவர் தனது முயற்சியில், கணித நாடகப் போட்டியை மாணவர்கள் பங்கேற்புடன் நடத்தினார்.

இதுகுறித்து அவர் கூறியது: மாணவர்களுக்கு அனுபவப்பூர்வமாக, எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கணிதப் பாடத்தை நடத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். அதன் ஒரு பகுதியாக நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்துவந்தது.

அதை நடைமுறைப்படுத்தும்போது, மற்றவர்களால் கேலி செய்யப்படுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனாலும், அதற்கான தயாரிப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தேன். தற்போது அவ்வப்போது மாணவர்களுக்கு நாடகம் வாயிலாக கணிதம் கற்பிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறேன்.

நாடகத்தின் கதையையும், காட்சியமைப்பையும் நானே உருவாக்குகிறேன். மாணவர்கள் அதற்கேற்ற வகையில் தயாராகி நடிக்கிறார்கள். கடையில் சென்று காய், கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்குவது, வீடுகளில் தளத்தில் டைல்ஸ் போடுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது, தச்சு வேலைகள் மூலம் சில பொருட்களை உருவாக்குவது போன்ற கருத்தாக்கங்களுடன் காட்சிகள் அமைக்கப்படும்.

இதில் மாணவர்கள் பங்கேற்று நடிக்கும்போது நிறுத்தல் அளவு, பரப்பளவு, கொள்ளளவு, நீளம், அகலம், கூட்டல், பெருக்கல் உள்ளிட்டவற்றை அனுபவப்பூர்வமாக தெரிந்து கொள்கிறார்கள். அவர்களாகவே அளவீடுகள் குறித்து நேரிடையாக உணர்ந்து பேசிக்கொள்கிறார்கள். இது எளிதில் மனதில் பதிவதாக உள்ளது.

மேலும், பொருட்களின் விலை உள்ளிட்ட அன்றாட பொருளாதார நடைமுறைகளையும் தெரிந்து கொள்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணிதத்தின் பயன்பாடு உள்ளது என்பதை அறிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கணிதப் பாடத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்கிறார்கள். 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களிடம் இவ்வாறு கணிதத்தை கற்பிக்கிறேன். வழக்கமான வகுப்பறை கட்டுப்பாடுகளின்றி சற்று ரிலாக்ஸ் ஆக, எளிதாக கற்றுக்கொள்ள முடிவதால் மாணவர்கள் இதை ஆர்வத்துடன் வரவேற்கிறார்கள். ஆசிரியர்களும் இதனை ஊக்குவிக்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x