Published : 16 Sep 2023 12:56 AM
Last Updated : 16 Sep 2023 12:56 AM

போதிய ஆதரவு கிடைக்கவில்லை - சீமான் மீதான வழக்கை வாபஸ் வாங்கிய நடிகை விஜயலட்சுமி

சென்னை: சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கியுள்ளார் நடிகை விஜயலட்சுமி. எழுத்துப்பூர்வமாக புகார் மனு அளித்திருந்த நிலையில் அதனை வாபஸ் வாங்கியுள்ளார்.

மேலும், "வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. என்னால் தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை" என்றும் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி: திரைப்பட நடிகை விஜயலட்சுமி கடந்த ஆக.28-ம் தேதி காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், ‘மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சீமான் என்னைத் திருமணம் செய்துகொண்டார். நாங்கள் கணவன், மனைவியாக வாழ்ந்தோம். நான் 7 முறை கர்ப்பமானேன். ஆனால்,என்னுடைய அனுமதியின்றி, மாத்திரை மூலம் கருச்சிதைவு செய்தார். தற்போது சீமான் கட்சியைச் சேர்ந்த மதுரை செல்வம் என்பவர் என்னை மிரட்டுகிறார். எனவே, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தார்.

மேலும், திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, நேரில் ஆஜராகுமாறு வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், கடந்த 12-ம் தேதி சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில், வளசரவாக்கம் போலீஸார், சீமானுக்கு நேற்றுமுன்தினம் 2-வது முறையாக சம்மன் வழங்கினர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை அணியினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சீமான் எழுதிய மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் எனக்கு வழங்கிய சம்மனில், நான் காவல் நிலையத்துக்கு நேரில் வந்து,விளக்கம் அளிக்குமாறு கோரப்பட்டுள்ளது. நான் நேரில் வருகிறேன். ஆனால், நான் நேரில் வரும்போது, என் மீது குற்றம்சாட்டும் விஜயலட்சுமி, வீரலட்சுமியும் அங்கு வர வேண்டும்.

மேலும், அவர்கள் எனக்கு எதிராக தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு, அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்களது குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. ஆனாலும், தொடர்ந்து பொதுவெளியில் பேசி, எனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர்.

கடந்த முறை சம்மன் கொடுக்கப்பட்டபோது, எனது சார்பாக காவல்நிலையத்தில் ஆஜராக எனது கட்சிவழக்கறிஞர்கள், வழக்குத் தொடர்பான அடிப்படை விவரங்களைக் கேட்டனர். ஆனால், ஆவணங்களை வழங்க போலீஸ் தரப்பில் மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

கட்சி நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பாக எனது நிகழ்ச்சிநிரல்களும், பயணத் திட்டங்களும்ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, ஒரே நாளில் 3 பேரையும் வைத்து விசாரித்து, குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு சீமான் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, சீமான் செப்.18-ம் தேதி விசாரணைக்கு ஆஜராவார் என்று அவரது தரப்பினர் தெரிவித்தனர். மேலும் மானின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகக் கூறி, நடிகை விஜயலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத் தலைவர் வீரலட்சுமி ஆகியோருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதில், இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். இல்லையேல், 15 நாட்களுக்குள் தாங்கள் தெரிவித்த கருத்துகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x