Published : 15 Sep 2023 08:32 PM
Last Updated : 15 Sep 2023 08:32 PM

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும்: மதுரை மதிமுக மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

படம்: நா.தங்கரத்தினம்

மதுரை: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தை முறியடிக்க வேண்டும், இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உலக அளவில் தமிழர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 தீர்மானங்களை மதுரை மாநாட்டில் மதிமுக நிறைவேற்றியது.

மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் விபரம்: > பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை சீர்குலைக்க நினைக்கும் பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கும்.

> இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவை புதிய பெயர் கொண்ட சட்டங்கள் மூலம் மாற்ற சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராக இருப்பதால் மத்திய அரசு புதிய சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும்.

> ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும். மக்களாட்சி கோட்பாடுகளின் ஆணிவேர்களை அறுத்து எரிந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து, சர்வாதிகார இந்துராஷ்டரத்தைக் கட்டமைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜகவின் திட்டத்தை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கரம் கோர்த்து முறியடிக்க வேண்டும்.

> நூலகச் சட்டம் என்ற பெயரில் நூலகங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்.
> விஸ்வகர்மா திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.
> தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு உடனடியாக மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

> பல்கலைக்கழக மானிய குழு விதிகளை மீறியும், மாநில அரசின் அதிகாரத்தை பறித்தும் எதேச்சாதிகாரமாக துணைவேந்தர் தேடுதல் குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு ஆளுநருக்கு கண்டனம்.
> மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
> மதுரை மாநகருக்கு அம்ரூத்3 திட்டத்தின் கீழ் ரூ.1,685.76 கோடியில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேரடியாக குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
> வரி இல்லா வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பை தவிர்க்க, வங்க தேச ஆடைகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசுக்கு தமிழகம் அழுத்தம் தர வேண்டும்.

> குருமன்ஸ் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை செய்ய வேண்டும்.
> உலகத் தமிழினம் இணைந்து இலங்கையில் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றை ஐ.நா. சபை மூலம் நடத்துவதற்கு உறுதி ஏற்க வேண்டும்.
> எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கி உள்ள இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
> நியாய விலைக் கடைகளில் கொடுக்கும் பாமாயில் எண்ணெயை ரத்து செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

“மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மதிமுகவுக்காக உழைக்கும் உண்மை தொண்டருக்கு இந்த வாய்ப்பை அளித்தால் மகிழ்வேன்” என்று மதுரை மதிமுக மாநாட்டில் வைகோவின் மகனும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ பேசினார். வாசிக்க > “தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை... சனாதனத்தை அகற்றுவது கடமை...” - மதுரை மதிமுக மாநாட்டில் துரை வைகோ பேச்சு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x