Published : 15 Sep 2023 05:35 AM
Last Updated : 15 Sep 2023 05:35 AM

வேங்கைவயல் விவகாரம் - இடைக்கால அறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன், தனது இடைக்கால அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியை அசுத்தம் செய்த விவகாரம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை சேர்ந்த ராஜ்கமல் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் நீதிபதி எம்.சத்தியநாராயணன் சார்பில் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, வேங்கைவயல் விவகாரம் தொடர்பான அவரது இடைக்கால அறிக்கையை சீலிட்டஉறையில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை நிலை குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

பின்னர் அவர், ‘‘இந்த வழக்கில் குற்றம் செய்த நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 191 சாட்சிகளிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். சந்தேகப்படும் 25 பேரிடம் ஏற்கெனவே மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 4 பேரிடம்2 வாரங்களில் சோதனை நடத்தி முடிக்கப்படும்’’ என்றார்.

இதையடுத்து, போலீஸ் விசாரணை மந்தகதியில் இருப்பதாக அறிக்கையில் நீதிபதி எம்.சத்தியநாராயணன் தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த அறிக்கையை பத்திரப்படுத்த பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர்.

பின்னர், இந்த வழக்கின் புலன் விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நவ.7-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x