Published : 07 Sep 2023 02:12 PM
Last Updated : 07 Sep 2023 02:12 PM

அரசியல்வாதிகளால் மக்கள் மிரட்டப்படுவதை நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது: சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை

சென்னை: “அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதையும் இந்த நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது” என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள அப்துல் அஜீஸ் தெருவில் கிரிஜா என்ற மூதாட்டிக்குச் சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கம் என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வீட்டுக்கான வாடகை தராமல் இருந்து வந்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது வீட்டில் குடியிருப்பதற்கான வாடகையை வழங்க ராமலிங்கத்துக்கு உத்தரவிடக் கோரி கிரிஜா வழக்குத் தொடர்ந்திருந்தார்.

உச்ச நீதிமன்றம் வரை விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், ராமலிங்கம் வீட்டை காலி செய்ய உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், ராமலிங்கமும் வீட்டை காலி செய்யாமல் தொடர்ந்து வசித்து வந்தார். இதையடுத்து, கிரிஜா சென்னை உயர் நீதிமன்றத்தில், ராமலிங்கத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், 48 மணி நேரத்துக்குள் காவல் துறையினர் உதவியுடன் மூதாட்டியின் வீட்டில் இருந்து ராமலிங்கத்தை காலி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், இதுகுறித்த அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமலிங்கத்தை அந்த வீட்டிலிருந்து காலி செய்து, வீட்டின் உரிமையாளரிடம் வீடு ஒப்படைக்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஒப்புக்கொண்ட மூதாட்டி கிரிஜா தரப்பினர், வாடகை பாக்கி இன்னும் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, "அரசியல்வாதிகளின் வார்த்தைகளும் செயல்களும் தொண்டர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் பொதுமக்களுக்கு நன்மை தரக்கூடிய வகையில் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தின் மூலம் பொதுமக்களை மிரட்டுவதையும், அவர்களுக்கு பிரச்சினை ஏற்படுத்துவதையும் இந்த நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்காது.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை, தங்களது அதிகாரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டுமே தவிர, சுயநலத்துக்காக பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது. நில அபகரிப்பு என்பது தற்போது பகல் கொள்ளையாக மாறிவிட்டது. வாடகை பாக்கியை வசூலிப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, விசாரணையை செப்.11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x