Published : 11 Dec 2017 10:39 AM
Last Updated : 11 Dec 2017 10:39 AM

புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் வசந்தகுமார் எம்எல்ஏ வலியுறுத்தல்

புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்தை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் வலியுறுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி சென்னைவாழ் கன்னியாகுமரி மக்களின் நலச் சங்கங்கள் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காங்கிரஸ் எம்எல்ஏ எச்.வசந்தகுமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட கன்னியாகுமரி மக்களின் நலச் சங்கங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு இடையே நிருபர்களிடம் வசந்தகுமார் கூறியதாவது:

‘ஒக்கி’ புயல் தாக்கியதில் கன்னியாகுமரி மாவட்டம் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 100 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புயலில் சிக்கி மாயமாகியுள்ளனர். 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் பழுதடைந்துள்ளன. ரப்பர், தேக்கு, தென்னை உள்ளிட்ட நீண்டகால பலன் தரும் மரங்கள் வேரோடு சாய்ந்து விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ள னர்.

புயல் பாதித்த பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட வேண்டும். மத்திய அரசு உடனடியாக பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணமாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x