49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்கும் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை: தமிழக அரசு

49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுவிக்கும் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்கவில்லை: தமிழக அரசு
Updated on
1 min read

சென்னை: நன்னடத்தையின் அடிப்படையில் 49 சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான முதல்வரின் பரிந்துரை குறித்து ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

நீண்டகாலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரிய வழக்குகள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக முதல்வர் பரிந்துரையின்பேரில் 49 சிறைவாசிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான பரித்துரையை தமிழக அரசு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. அந்த பரிந்துரைகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பான உள்துறை செயலாளரின் கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் மனோகர், தமிழக அரசின் பரிந்துரைக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது இல்லை. ஆளுநர் மேலும் தாமதம் செய்வார் என குற்றம்சாட்டினார். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநரின் முடிவு என்ன என்பது குறித்து தெரிந்த பின்னர், வழக்குகளை முடிவு செய்யலாம் எனக் கூறி விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in