Published : 05 Sep 2023 02:50 PM
Last Updated : 05 Sep 2023 02:50 PM

புதிய தலைமைச் செயலகம் தொடர்பான வழக்கு: அதிமுக மனுவுக்கு அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் நடந்த முறைகேடுகள் தொடர்பான அரசின் மேல்முறையீடு வழக்கில், தன்னையும் இணைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தனின் மனுவுக்கு தமிழக அரசு, லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டப்பட்டது. கோடிக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிதாக பொறுப்பேற்ற அதிமுக அரசு, புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் 2011 டிசம்பரில் விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆணையத்தை கலைத்து உத்தரவிட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சேகரித்த ஆதாரங்களை புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கவும், ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதன் அடிப்படையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த அனுமதி அளித்து 2018-ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து முக ஸ்டாலின், துரைமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக 2018-ம் ஆண்டு செப்டம்பரில் பொதுத்துறைக்கு புகார் அளித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறி, அதிமுக முன்னாள் எம்பி ஜெயவர்த்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக, இந்த வழக்கில் விசாரணை நடத்த அக்கறைகாட்டவில்லை. எனவே, 2018-ம் ஆண்டு நான் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். அரசின் மேல்முறையீட்டு வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசியல் நோக்கத்துக்காக மனுதாரரால் இந்த புகார் அளிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை விசாரணை நடத்தியும், லஞ்ச ஒழிப்பு துறையால் எந்த ஆதராமும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே, மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தினகரன், அரசியல் என்பது தம்முடைய தொழில் அல்ல. தாம் ஒரு மருத்துவர் என்ற அடிப்படையிலேயே புகார் அளித்தேன். லஞ்ச ஒழிப்புத் துறை பச்சோந்தி போல செயல்படுவதாக உயர் நீதிமன்றமே தெரிவித்துள்ளது என்று கூறினார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x