Published : 02 Sep 2023 06:25 AM
Last Updated : 02 Sep 2023 06:25 AM

பணி நியமனம் வழங்காவிட்டால் தமிழகம் முழுவதும் செப்.11-ல் போராட்டம்: கோவிட் செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

கோப்புப்படம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி பணி நியமனம் வழங்காவிட்டால், தமிழகம் முழுவதும் செப்.11-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் எம்ஆர்பி கோவிட் செவிலியர்கள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் நேற்று கூறியதாவது: கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பேரிடர் காலத்தில் எம்ஆர்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தற்காலிக முறையில் பணியமர்த்தப்பட்டனர். இதில் 3 ஆயிரம் பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். எஞ்சியுள்ள 3,290 பேரையும் பணி நிரந்தரம் செய்யுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தோம்.

‘‘கரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களும், திமுக ஆட்சி அமைந்ததும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’’ என்று, முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியிலும் அறிவித்தார். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அரசு தரப்பு கடந்த 2022 மார்ச் மாதம் உறுதி அளித்தது.

ஆனால், அதை மீறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல், 3 ஆண்டுகள் பணியாற்றிய எங்களை அரசு பணி நீக்கம் செய்தது. மாவட்ட சுகாதார மையம் மூலம் தற்காலிக மாற்றுப் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த பணியும் வழங்கவில்லை. இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கு தொடர்ந்த செவிலியர்களுக்கு 6 வாரத்தில் அரசு மருத்துவமனைகளில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே, இதில் முதல்வர் கவனம் செலுத்தி, உடனடியாக எங்களை பணி நியமனம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தமிழகம் முழு வதும் செப்.11-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார். சங்கத்தின் தலைவர் விஜயலட்சுமி, செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x