Published : 18 Dec 2017 08:23 AM
Last Updated : 18 Dec 2017 08:23 AM

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக பெண்ணிடம் போலீஸார் விசாரணை: விடுவிக்கக்கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் விரட்டியடிப்பு

கொருக்குப்பேட்டை பகுதியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக, தினகரனின் பெண் ஆதரவாளரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை விடுவிக்கக் கோரி ஆர்.கே.நகர் காவல் நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட தினகரன் ஆதரவாளர்களை போலீஸாரும், துணை ராணுவப் படையினரும் நேற்று விரட்டியடித்தனர்.

ஆர்.கே.நகர் தொகுதி வாக்குப் பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. தொகுதி முழுவதும் குவிந்துள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் வாக்கு சேகரிப்பு மற்றும் இன்னபிற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பண பட்டுவாடா தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளது. அவ்வாறு, கொருக்குப்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் வேட்பாளர் தினகரனின் பெண் ஆதரவாளர் ஒருவர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்து வருவதாக கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று புகார் வந்தது. அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் காவல்நிலைய போலீஸார், காவல் நிலையத்திலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு செல்வி என்ற பெண் ரூ.13 ஆயிரம் ரொக்கத்தை கையில் வைத்துக்கொண்டு இருந்ததைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

உடனே அவரை விடுவிக்கக்கோரி அப்பகுதியைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, அதன் எதிரில் உள்ள எண்ணூர்- மணலி சாலையில் மறியலிலும் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸாரும், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்படியும் அவர்கள் கலைந்து செல்லாத நிலையில் அவர்களை காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தூரம் வரை விரட்டியடித்தனர்.

பின்னர், ஆர்.கே.நகர் காவல்நிலையம் வந்த தேர்தல் செலவின பார்வையாளர் ஷில் ஆஷிஸ், தினகரன் ஆதரவாளர் செல்வியிடம் விசாரணை நடத்தினார்.

மற்றொரு பெண்ணிடம்

இதேபோன்று நேரு நகரை சேர்ந்த ரேவதி என்ற பெண், அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுகவினர் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ரேவதி என்பவரையும் ஆர்.கே.நகர் போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். அவரிடம் இருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது அப்பெண் சீட்டு நடத்துவதற்காக வைத்திருந்த பணம் என்று அவரது உறவினர்கள் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x