Published : 30 Dec 2017 04:54 PM
Last Updated : 30 Dec 2017 04:54 PM

பேறுகால இறப்பு; திருநாவுக்கரசர் அறிக்கை தவறான புரிதலின் வெளிப்பாடு: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பதில்

 பேறுகால இறப்பு விகிதம் குறித்த ஆய்வுக் கணக்கை வாய்மொழியாகக் கேட்டுப் பதிவு செய்த ஒரு ஆங்கில நாளிதழ் கட்டுரையைப் படித்து தவறாக புரிந்துகொண்டதே திருநாவுக்கரசர் அறிக்கை, புள்ளியியல் கணக்கீடு குறித்த தவறான புரிதல் என்று சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் பேறுகால இறப்பு விகிதம் தேசிய அளவில அதிகரித்துள்ளது குறிப்பாக சென்னையில் சதவீதம் அதிகரித்துள்ளது என தமிழங்க காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

 இது குறித்து சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் 'தி இந்து' தமிழ் இணையதளம் சார்பில் கேட்டபோது அவர் விளக்கம் அளித்தார்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பேறு கால இறப்பு விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளாரே?

அது ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த தகவலை வைத்து கொடுக்கப்பட்ட அறிக்கை. அது ஒரு அரைகுறை கணக்கீடு. சாதாரணமாக வாய்மொழியாகக் கேட்ட தகவலை வைத்து எழுதப்பட்ட கட்டுரையை வைத்து அந்த அறிக்கை எழுதப்பட்டுள்ளது. பேறுகால இறப்பு விகிதம் குறித்த கணக்கீடு (MMR) ஆறு மாதத்திற்கு எல்லாம் எடுக்க மாட்டார்கள். இது மொத்தமாக சரியாகவும் இருக்காது, தவறாகவும் இருக்காது. சாதாரண வாய்மொழி பதிலை வைத்துப் போட முடியாது.

உதாரணத்திற்கு 2 ஆண்டுக்கு முன்னர் ஊட்டியில் டிசம்பர் மாதம் வரை தாய்மார்கள் இறப்பே இல்லை. ஆனால் டிசம்பர் மாதம் 5 தாய்மார்கள் இறந்து போனார்கள். இதை வைத்து ஆறுமாதம் 100 சதவீத இறப்பே இல்லை என்று சொல்ல முடியுமா அல்லது கடைசி வாரத்தில் 5 பேர் இறந்ததை வைத்து ஒரே வாரத்தில் ஐந்து பேர் இறப்பு, 52 வாரத்திற்கு எத்தனை பேர் என கணக்கிட முடியுமா? சுகாதாரத்துறையில் தொடர்ச்சியாக ஆடிட்டிங் வரும் போது தாய்மார்கள் இறப்பு பற்றி ஆய்வு நடத்துவார்கள். அந்த ஆய்வு பற்றி அந்த செய்தியாளர் கேட்ட போது அதை சாதாரணமாக கூறியதை செய்தியாக்கி உள்ளனர்.

அதை எடிட்டோரியல் செய்தியாக்கும் போது ஐந்தாண்டுகளில் என்று தலைப்பிட்டு அதை மெருகூட்டியுள்ளனர். ஆறு மாத காலத்திற்கு கணக்கீடு எடுக்க மாட்டார்கள். காரணம் சில மாதங்களில் அதிக டெலிவரி இருக்கும். உதாரணத்திற்கு மிசோராம் போன்ற மாநிலங்களில் மூன்றாண்டுக்கு ஒரு முறை கணக்கெடுப்பார்கள். ஆகவே பதிவு செய்யப்பட்ட டேட்டாவைத்தான் செய்தியாக்க வேண்டும். இது சாதாரணமாக ஆய்வின் போது சொன்னதை செய்தியாக்கி உள்ளனர்.

ஐந்தாண்டில் இப்படி நடந்துள்ளது என்று அறிக்கையில் சொல்கிறாரே?

அதெல்லாம் சரி இல்லாத தகவல். அதிலும் சென்னையைப்பற்றி சொல்கிறார்கள். அப்படி எல்லாம் எடுக்க முடியாது. எங்கள் அதிகாரிகளுக்கே என்ன கூறியிருக்கிறேன் என்றால் தகவல் கேட்கும் போது முறையான டேட்டாவை அச்சிட்டுக் கொடுங்கள். வாய்மொழியாக சொல்வதை தவிர்க்க வேண்டும். காரணம் வாய்மொழியில் சொன்னதை வைத்து செய்தியாக்கினோம் என்று சொல்ல வாய்ப்புள்ளது அல்லவா? அதனால் தான் எழுத்துப்பூர்வமான தகவலாகக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன்.

ஏன் இப்படி ஒரு பிரச்சினை உருவாகிறது?

இவை அரசியல் அறிக்கைகள். எங்கள் அதிகாரிகள் அச்சிடப்பட்ட டேட்டாவை அறிக்கையாக கொடுக்க வேண்டும் என்று இதற்காகத்தான் சொல்கிறோம். அதிலும் சென்னையை முக்கியமாக சொல்கிறார்கள். புள்ளியல் இருக்கிறது அல்லவா? அதில் இது போன்ற கணக்கீடுகள் எடுக்க கூடாது என்கிறார்கள். உதாரணத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இறப்பு குறைவாக இருக்கும் என்பார்கள். அதற்கு காரணம் கொஞ்சம் சிக்கலான பிரசவங்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அனுப்புவார்கள். ஆகவே அதை வைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் பேறுகால இறப்பே இல்லை என்று கூற முடியுமா?

முறையான கணக்கீடு எப்படி இருக்க வேண்டும்?

மொத்த கணக்கீடே கிடைக்காது . அதில் இறப்பு மட்டும்தான் எடுப்பார்கள். பிறப்பு 1.5 லட்சம் பிறப்பு இருந்தாலும், அரசு கணக்கில் 80 ஆயிரம் அளவு தான் வரும். தாய்மார்கள் விகிதாச்சாரம் ஒரு லட்சம் தாய்மார்களில் எவ்வளவு இறப்பு என்றுதான் எடுப்போம். நாம் எவ்வளவு முறையாக பார்த்தாலும் 10 லட்சம் டெலிவரி என்று தகவல் வரும். ஆனால் 11 லட்சம் பிரசவம் ஆண்டுதோறும் நடக்கும். இதில் 800 தாய்மார்கள் இறப்பு வரும். அப்படியானால் 10 லட்சம் பிரசவத்தில் 800 என்றால் லட்சம் பேருக்கு 80 என்று வரும். ஆனால் 11 லட்சத்தை கணக்கிட்டால் 72 பேர் அளவில் இறப்பு வரும். ஆகவே இதை முறையாக கணக்கிட வேண்டும். அதைத்தான் புள்ளியியலில் சொல்கிறோம். வாய் மொழியாக சொல்வதை வைத்து எதையும் கூற முடியாது.

சென்னையில் இறப்பு அதிகம் என்று சொல்கிறார்களே?

ஒரு மாவட்டத்திற்கு என்று தனியாக கணக்கெடுப்பது என்பது சரியானது அல்ல. மூன்றாம் நிலை மருத்துவ வசதி கொண்ட மாவட்டம் சென்னையை அப்படி கணக்கில் எடுப்பது தவறான ஒன்று. ஐந்தாண்டுக்கு முன்பு வரை பிரசவம் அந்தந்த மாவட்டத்திலேயே நடந்தது. ஆனால் இன்றைய வளர்ச்சியில் கொஞ்சம் சிக்கலாக இருந்தாலும் உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதை வைத்து சென்னையில் இறப்பு விகிதம் அதிகம் என்று கூற முடியாது அல்லவா? ஊட்டியில் பிரசவம் மலைப் பிரதேசத்தில் நடப்பதில்லை. இதை வைத்து ஊட்டியில் பிரசவத்தில் பெண்கள் இறப்பே இல்லை என்று கூற முடியுமா?

சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் டெங்கு இறப்பு விகிதம் அதிகம் என்றார்கள். காரணம் டெங்குவினால் பாதிக்கப்பட்டவர்கள் பக்கத்து மாவட்டங்களிலிருந்து சென்னையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். அப்படியானால் இதை சென்னையில் அதிக இறப்பு என்று கொள்ள முடியுமா? பாண்டிச்சேரியில் நம் நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள் அதை வைத்து அங்கு அதிகம் என்று கூற முடியுமா? கேரளாவிலிருந்து கோவைக்கு சிகிச்சைக்கு வருகிறார்கள்.

ஆகையால் இதை ஆறுமாத காலம், வாய்மொழியாகக் கேட்டுப் பதிவு செய்வது, ஒரு மாவட்டத்துக்கு தனியாக தாய்மார்கள் இறப்பு விகிதம் என்று எடுப்பது குறிப்பாக சென்னைக்கு அடுத்த மாவட்டங்களில் இருந்து பிரசவத்துக்கு தாய்மார்கள் வரும்போது அதை சென்னையில் இறப்பு அதிகம் என்று கூறுவது என்பது தவறான கணக்கீடு.

இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x