Published : 22 Aug 2023 07:17 AM
Last Updated : 22 Aug 2023 07:17 AM

தமிழக மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை நீதிமன்றம் உத்தரவு

விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 10 பேரை நிபந்தனைகளுடன் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆக.3-ம் தேதி இரவு செந்தில்குமார் என்பவரின் விசைப்படகில் செல்வக்குமார், ராஜா, பொன்னுராஜா, இளையராஜா, கணபதி, சாய் சிவா, முகேஷ், அரவிந்த், அழகு, வேலு ஆகிய 10 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

ஆக.6-ம் தேதி முல்லைத்தீவு கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், திரிகோணமலை நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பயாஸ் ரசாக், மீனவர்கள் மீண்டும் இலங்கை எல்லைக்குள் மீன்பிடித்தால் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதித்து 10 பேரையும் விடுதலை செய்தார். அக்.30-ம் தேதி படகின் உரிமையாளர் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இதையடுத்து, மீனவர்கள் 10 பேரும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x