Published : 21 Aug 2023 05:25 AM
Last Updated : 21 Aug 2023 05:25 AM

2-ம் சுற்று கலந்தாய்வில் மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு: மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர் எண்ணிக்கை 642 ஆக அதிகரிப்பு

கோப்புப்படம்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான 2-ம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டில் மருத்துவம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது.

நீட் தேர்வு வரும் வரை தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 40 அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப்படிப்பில் சேர்ந்து வந்தனர். நீட்தேர்வுக்கு பிறகு இந்த எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 2020-21-ம் ஆண்டில் 435 இடங்கள், 2021-22-ம் ஆண்டில் 555 இடங்கள், 2022-23-ம் ஆண்டில் 584 இடங்கள் கிடைத்தது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 486 எம்பிபிஎஸ் இடங்கள், 136 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 622 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தன.

தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டு இடத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்கு இடஒதுக்கீடு பெற்ற அரசுப் பள்ளி மாணவர் சேராததால், அது காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு எம்பிபிஎஸ் இடம் மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் காலியாக உள்ள 20 பிடிஎஸ் இடங்கள் ஆகியவை இன்று (ஆக.21) தொடங்கும் 2-ம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. இதன்மூலம், இந்த ஆண்டு மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெறும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் படித்து முடிக்கும் வரை கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x