Published : 15 Dec 2017 11:23 AM
Last Updated : 15 Dec 2017 11:23 AM

கமுதி அருகே கொடூரம்: பள்ளி தாளாளர் வெட்டிக் கொலை

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பள்ளி தாளாளர் 5 பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கமுதி அருகே அபிராமத்தில் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி தாளாளராக இருந்தவர் முகம்மது ஆரிப் (58). இவர் நேற்று மதிய உணவுக்கு பள்ளியிலிருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளியை அடுத்த பள்ளிவாசல் அருகே சென்றபோது இரு இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் முகம்மது ஆரிபை வழிமறித்து, அரிவாளால் கழுத்து மற்றும் உடல் பகுதியில் வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அருகில் இருந்தவர்கள் காப்பாற்றச் செல்வதற்குள் அந்தக் கும்பல் அவரை கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பியது. அபிராமம் போலீஸார் முகம்மது ஆரிப் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்தவர்கள் யாரென்று தெரியவில்லை.

பள்ளி தாளாளர் பதவிக்கான முன்விரோதமாகவோ, அல்லது ஒரு வாரத்துக்கு முன்பு நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு தொடர்பான முன்விரோதமாகவோ இக்கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கமுதி டிஎஸ்பி சண்முகசுந்தரம் தலைமையில், முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, பள்ளிவாசல், கமுதி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x