Published : 30 Dec 2017 09:19 PM
Last Updated : 30 Dec 2017 09:19 PM

திருமுல்லைவாயலில் காரில் வந்து வழிப்பறி: ஆள் கடத்தல் குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேர் கைது

சென்னையில் காரில் வந்து குற்றச்செயலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் திருமுல்லைவாயல் பகுதியில் ஆள் கடத்தல் மற்றும் வழிப்பறி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் என தெரியவந்தது.

அம்பத்தூர், எம்.கே.பி.நகர், காமராஜர் தெருவில் வசிப்பவர், செல்வம்(42). இவர் நேற்று மாலை திருமுல்லைவாயல் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, கருப்பு நிற ஸ்கோடா காரில் வந்த 4 மர்ம நபர்கள் செல்வத்தை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம், செல்போன் மற்றும் கை கடிகாரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காரில் தப்பிச்சென்று விட்டனர்.

செல்வம் இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். குற்றவாளிகளைப் பிடிக்க, திருமுல்லைவாயல் காவல் நிலைய ஆய்வாளர், ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் நடத்திய புலன் விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் குற்றச்செயலில் ஈடுபட்ட டி.பி.சத்திரத்தை சேர்ந்த தட்சிணா (எ) தட்சிணாமூர்த்தி(41), கோகுலன்(30) ஷெனாய் நகரைச்சேர்ந்த சதிஷ்குமார்(23) வி அம்பத்தூரைச் சேர்ந்த விஜயகுமார்(29) ஆகிய 4 பேரை கைது இன்று காலை 6 மணியளவில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய ஸ்கோடா கார், 3 கத்திகள், செல்போன், கை கடிகாரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி அன்று திருமுல்லைவாயல் அருகே டிபி சத்திரத்தை சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரை சிலர் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக, திருமுல்லைவாயலை சேர்ந்த கணேசன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார் கடத்தப்பட்ட ஆகாஷை அன்றைய தினமே வேப்பம்பட்டு அருகே மீட்டனர். தட்சிணாமூர்த்திக்கும், அண்ணாநகரைச் சேர்ந்த ராதா (எ) ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக, ராதாகிருஷ்ணனை பழி வாங்க அவரது உறவினரான ஆகாஷை தட்சிணாமூர்த்தி மற்றும் சிலர் கடத்தி கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட தட்சிணாமூர்த்தி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் மீண்டும் நேற்றைய குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், விசாரணையில், தட்சிணா (எ) தட்சிணாமூர்த்தி டிபி.சத்திரம் காவல் நிலைய பழைய குற்றவாளி என்பதும், இவர் மீது 4 கொலை வழக்குகள் மற்றும் பல கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில் பலமுறை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே போல கோகுலன் மீது டிபி.சத்திரம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகளும், விஜயகுமார் மீது அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், சதிஷ்குமார் மீது ஆகாஷ் என்பவர் கடத்தப்பட்ட வழக்கும் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் 4 பேரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x