Published : 19 Dec 2017 10:19 AM
Last Updated : 19 Dec 2017 10:19 AM

திருநள்ளாறில் இன்று சிறப்பு அபிஷேகம்

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சனீஸ்வர பகவானுக்கு இன்று சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற உள்ளன.

சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று (டிச.19) சனிப் பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

சனி பகவான் காலை 10.01 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார்.

விழாவையொட்டி, இன்று காலை 7 மணியளவில் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய், மஞ்சள், திரவியப் பொடிகள், சந்தனம், பன்னீர், பழங்கள், பஞ்சாமிர்தம், தேன், தயிர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது.

சனிப் பெயர்ச்சி நடைபெற உள்ள நேரமான காலை 10.01 மணிக்கு சனீஸ்வர பகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்படும்.

இன்று இரவு வரை கோயில் வசந்த மண்டபத்தில் உற்சவர் சனீஸ்வர பகவான் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். சனிப் பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள், உற்சவரையும் வழிபட்டுச் செல்லும் வகையில் இந்தாண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தர்பாரண்யேஸ்வரர் கோயிலுக்கு வந்து நளன் குளத்தில் நீராடி, சனீஸ்வர பகவானை தரிசித்துச் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x