Published : 21 Nov 2017 09:50 AM
Last Updated : 21 Nov 2017 09:50 AM

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தை கட்டுப்படுத்த டிஜிட்டல் -லாக்கிங் சிஸ்டம் ஏன் கூடாது? - அரசு பதிலளிக்க நீதிபதி கிருபாகரன் உத்தரவு

பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்பவர்கள் மட்டும் அலுவலகத்துக்குள் செல்லும் வகையில் ஏன் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் கொண்டு வரக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன் இதுதொடர்பாக 10 கேள்விகளை எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆலந்தூரில் உள்ள ஒரு மூதாதையர் சொத்தை பாகப்பிரிவினை செய்து தருவதற்காக பம்மல் சார்-பதிவாளரிடம் முறையான முத்திரைக் கட்டணம் செலுத்தி ஓராண்டுக்கு மேலாகியும் பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை. ஆவணங்களை திருப்பியும் தரவில்லை என கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி என்.கிருபாகரன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பத்திரப்பதிவுத் துறையில் லஞ்சம் பெறுவது தொடர்பான பட்டியலை நீதிபதி முன்பாக தாக்கல் செய்து வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், ‘‘தமிழகத்திலேயே ஊழல் அதிகமாக நடைபெறும் துறையாக பத்திரப்பதிவுத்துறை தான் உள்ளது. குறைந்தது ரூ. ஒரு லட்சம் லஞ்சம் இல்லாமல் பத்திரப்பதிவு செய்ய முடியாது என்பதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். லஞ்சத்தை தடுக்கத்தான் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி தரகர்கள், ஏஜென்ட்கள் என்ற மூன்றாவது நபர்கள் மூலமாக லஞ்சம் கொடி கட்டிப்பறக்கிறது.

எனவே கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் உள்ள பத்திரப்பதிவு அலுவலங்களில் பெருகி வரும் லஞ்சத்தை தடுக்கவும், லஞ்சம் வாங்கியவர்கள் மீதும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, ரெய்டு நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பணம் எவ்வளவு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, பத்திரப்பதிவு அலுவலகங்களில் மூன்றாவது நபர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தவும், அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பத்திரப்பதிவு செய்பவர்கள் மட்டும் உள்ளே சென்று வரும் வகையில் ஏன் டிஜிட்டல் லாக்கிங் சிஸ்டம் ஏற்படுத்தக் கூடாது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள், மனுதாரருக்கு ஓராண்டாக ஏன் பத்திரப்பதிவு செய்யவில்லை என்பது உள்ளிட்ட 10 கேள்விகளுக்கு தமிழக வணிகவரித் துறை மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளர், தமிழக போலீஸ் டிஜிபி ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x