Published : 15 Aug 2023 06:13 AM
Last Updated : 15 Aug 2023 06:13 AM

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி நீட் தேர்வுக்கு விலக்கு பெற வேண்டும் - முத்தரசன் கோரிக்கை

சேலம்: மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கு பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில குழுக் கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் நேற்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று மாநில செயலாளர் முத்தரசன், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டோம் என ஆளுநர் பகிரங்கமாக அறிவிக்கிறார். ஆளுநர் அலுவலகம் பாஜக பிரச்சார அலுவலகம்போல செயல்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் அனிதா உள்பட 25 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இனியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

கல்லூரிகளை காட்டிலும் நீட் பயிற்சி மையம் அதிகமாக உருவாகி உள்ளது. சட்டப்பேரவையில் நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசோடு நெருக்கத்தில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பிரதமரிடம் பேசி தமிழகத்துக்கு நீட் தேர்வு விலக்கை பெற்றுத்தர வேண்டும்.

மத்திய அரசு டெல்லியில் இருந்து ஹரியாணாவுக்கு சாலை அமைப்பதில் ரூ.6,758 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த ஊழல் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x