

புதுச்சேரி: பாஜக சார்பில் வீடுகளில் 1 லட்சம் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அக்கட்சியின் புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: "சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் அனைவரும் உணரும் வகையில் வீடுகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.இதையேற்று என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு கடந்த ஆண்டு இரண்டரை லட்சம் தேசியக் கொடி வழங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சம் தேசியக் கொடியை வரும் சுதந்திர தினத்தில் ஏற்ற பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிவினைவாதத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பாஜக சார்பில் 5 மாவட்டங்களில் மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது.
இனி வரும் காலங்களில் ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க முடியாது. "என் மண் என் தேசம்" என்ற கோஷத்தை பிரதமர் முன்வைத்துள்ளார். இதை வலியுறுத்தும் வகையில் உழவர்கரையில் நடைபெறும் மவுன ஊர்வலத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொள்கிறார். புதுச்சேரி மாநில பாஜக சார்பில் பிரிவினைவாதத்தை கண்டித்து தேசிய கொடியுடன் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. வரும் 13, 14, 15-ம் தேதிகளில் அனைத்து தொகுதியிலும் இல்லம் தோறும் தேசியக் கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆளும் திமுக அரசு தேசியக் கொடியை வழங்கக்கூட முன்வரவில்லை. திமுக கொடியேற்றும் அரசு தேசியக் கொடி ஏற்ற முன்வரவில்லை. பாஜக தேசிய உணர்வோடு நாடு முழுவதும் தேசியக் கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் 50 ஆண்டு காலமாக செய்ய முடியாததை "என் மண் என் தேசம்" என்ற தேசிய உணர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.
புதுச்சேரியில் பாரதியார், பாரதி தாசன் வாழ்ந்த இடங்கள், கீழூர் நினைவிடம் உட்பட 5 இடங்களில் மண் எடுத்து 5 கலசங்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம். நாடு முழுவதும் 25 ஆயிரம் அமிர்த கலசங்களை சேகரித்து டெல்லியில் ஒருங்கிணைத்து தேச பற்றை வளர்க்க உள்ளனர். புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், பாஜக நிர்வாகிகள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர்” என்றார்.