Published : 10 Aug 2023 12:37 PM
Last Updated : 10 Aug 2023 12:37 PM

சென்னையில் 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை

சென்னை: ஜேம்ஸ் வால்ட்டர் என்பவருக்குச் சொந்தமான ஏற்றுமதி நிறுவனம் மற்றும் தொடர்புடைய 13 இடங்களில் அமலாக்கத் துறையினர் இன்று (வியாழக்கிழமை) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜேம்ஸ் வால்ட்டர் என்பவர் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மீதான ரூ.225 கோடி வங்கி மோசடி வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணைக்கு எடுத்துள்ளது. இதன்படி, ஜேம்ஸ் வால்ட்டருக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை காலை சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் கோடம்பாக்கம், அமைந்தகரை, வேளச்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு இடத்திலும், 9 முதல் 10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஏற்றுமதி நிறுவனம் எந்தெந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்துள்ளது, எவ்வளவு பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது, அரசுக்கு கணக்கு காட்டப்படாத வகையில் எவ்வளவு பரிவர்த்தனை நடந்துள்ளது என்பவை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கின் பின்னணி: Oceanic Ediblie International ltd என்ற நிறுவனம் வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப்ராஜ் ஆரோக்கியசாமி உள்ளிட்ட 4 பேர் இயக்குநர்களாக உள்ளனர்.

இந்நிறுவனத்தின் பெயரில், பல்வேறு வங்கிகளில் நிறுவன இயக்குநர்கள் ரூ.104 கோடி கடன் பெற்றுள்ளனர். இந்த கடன்கள் மூலம் வங்கிகளுக்கு ரூ.225 கோடி வரை இழப்பீடு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில், சிபிஐ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது.

இந்நிலையில், வங்கிகள் மூலம் பெற்ற கடன் தொகை மூலம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், பல்வேறு இடங்களில் முதலீடுகள் செய்துள்ளதாகவும்
அமலாக்கத்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ஆதாரமாக வைத்து அமலாக்கத்துறை இந்த சோதனையை மேற்கொண்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x