Published : 30 Nov 2017 09:38 AM
Last Updated : 30 Nov 2017 09:38 AM

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் குறும்படங்கள்: மாநகராட்சி பள்ளிகளுக்கு ஜெர்மன் கோத்தே இன்ஸ்டிடியூட் வழங்கியது

சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஜெர்மன் கோத்தே இன்ஸ்டிடியூட் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் நேற்று வழங்கப்பட்டன.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் 23 நாடுகளில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 18-ம் தேதி வரை அறிவியல் திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் சுற்றுச்சூழல் அறிவியல் குறித்து தயாரிக்கப்பட்ட 67 குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. சென்னையில் நடைபெறும் விழாவில் ஜெர்மன் கோத்தே இன்ஸ்டிடியூட் மற்றும் மேக்ஸ் முல்லர் பவன், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் அக்குறும்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

அதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த 9 முதல் 12 வயதுடைய மாணவர் களுக்கான 11 குறும்படங்கள், 12 முதல் 16 வயதுடைய மாணவர்களுக்கான 8 குறும்படங்கள் என மொத்தம் 19 குறும்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

அவற்றை ஜெர்மன் கோத்தே இன்ஸ்டிடியூட் மற்றும் மேக்ஸ் முல்லர் பவன் இயக்குநர் ஹெல்முட் சிப்பெர்ட் மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவர் புருஷோத்தம் ஆகியோர் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் நேற்று வழங்கினர். அதை மாநகராட்சியின் துணை ஆணையர் (கல்வி) மகேஸ்வரி ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். இந்த விழிப்புணர்வு குறும்படங்கள், சென்னை மாநகராட்சியின் 70 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காண்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x