Published : 09 Aug 2023 06:23 AM
Last Updated : 09 Aug 2023 06:23 AM

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முத்திரை தீர்வை, பதிவுக்கட்டணம் உயர்த்தப்படவில்லை - பதிவுத் துறை செயலர் விளக்கம்

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளுக் கான முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் உயர்த்தப்படவில்லை. கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த நடைமுறையே தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது என்று பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட விரும்பும் கட்டுமான நிறுவனத்தினர், இடத்தை விலைக்கு வாங்கி, குடியிருப்பு கட்ட திட்டமிட்டு, அதன்பின் வாங்க வருவோருடன் கட்டுமான ஒப்பந்தம் செய்வது வழக்கம்.குடியிருப்பு வாங்க முன்வருவோரின் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யும்போது, நிலத்தின் பிரிக்கப்படாத பாக மனைக்கான கிரைய பத்திரம் மற்றும் கட்டுமான ஒப்பந்த ஆவணம் ஆகியவை தனித்தனியாக பதிவு செய்யப்படுகிறது.

பிரிக்கப்படாத பாக மனையின்கிரைய ஆவணத்துக்கு, தற்போதுள்ள நடைமுறையில் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்புக்கு 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கட்டுமான ஒப்பந்தத்துக்கு குடியிருப்பின் கட்டுமான விலைக்குதலா ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வை, பதிவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த பதிவுக்கட்டணம் மட்டும் கடந்த ஜூலை 10 முதல் 2 சதவீதம் உயர்த்தப்பட்டு, கட்டுமான விலைக்கு 1 சதவீதம்முத்திரைத்தீர்வை, 3 சதவீதம் பதிவுக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இந்த நடைமுறை அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்னதாக பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இதுபோன்ற ஆவணங்கள் பதிவுக்கு வரும்போது, அடுக்குமாடி குடியிருப்பை ஆவணத்தில் குறிப்பிட வேண்டும் என்று சார்பதிவாளர்கள் வலியுறுத்த தேவையில்லை என 2020-ம் ஆண்டு அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால், இந்த அறிவுரையை சிலர் தவறாகப் பயன்படுத்தத் தொடங்கினர்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமானம் முழுமையாக முடிக்கப்பட்டு வழங்கப்படும் நிகழ்வுகளில்கூட, அடுக்குமாடி குடியிருப்பை நேரடியாக பயனாளிகளுக்கு கிரையம் எழுதிக் கொடுத்து பதிவு செய்வதற்குப் பதில், கட்டுமானம் முடிந்த பின்பும், அதை ஆவணத்தில் தெரிவிக்காமல், ஒப்பந்தப்பத்திரம், பிரிக்கப்படாத பாக மனைகிரைய பத்திரம் என்று மட்டுமே எழுதி பதிவு செய்யும் பழக்கம் 2020-க்குப்பின் கட்டுமான நிறுவனங்களால் பின்பற்றப்பட்டு வந்தது.

முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பான பத்திரங்களில் 7 சதவீதம் முத்திரைத்தீர்வை, 2 சதவீதம் பதிவுக்கட்டணத்தில் அரசுக்கு சேர வேண்டிய கூடுதலான 5 சதவீதம் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க கிரையப் பத்திரமாக பதியாமல், 2020-ம் ஆண்டு அறிவுரைக்குப்பின், ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வை மற்றும் 3 சதவீதம் பதிவுக்கட்டணம் மட்டுமே செலுத்தி கட்டுமான ஒப்பந்தமாக பதிவு செய்யப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இவ்வாறு பதிவு செய்யும் நிலைதொடர்ந்ததால் அந்த குடியிருப்பை எதிர்காலத்தில் மறுகிரையம் செய்யும்போது பிரச்சினை எழலாம்.

இதனைக் கருத்தில் கொண்டே பத்திரப் பதிவின்போது கட்டிடத்தின் கட்டுமானம் நிறைவுற்ற சான்றை வலியுறுத்த வேண்டாம் என ஏற்கெனவே வழங்கப்பட்ட அறிவுரைமட்டுமே தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதே தவிர அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

முழுவதும் கட்டி முடிக்கப்பட்ட குடியிருப்புகளை வாங்குவோர் கட்டுமான நிறுவனங்களிடமிருந்து நேரடியாக பிரிக்கப்படாத பாகமனை மற்றும் குடியிருப்பு இரண்டையுமே கிரையமாகப் பெற்றுக் கொள்வது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது,

அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படாத நிலையில் கட்டுமான ஒப்பந்தம் செய்துகொண்டு குடியிருப்புகளை வாங்க உத்தேசிப்பவர்களுக்கு மட்டும் ஏற்கெனவே உள்ள அதே நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும். முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான பத்திரத்தை கட்டுமான கிரைய ஆவணமாகவே அதன் தன்மையைப் பாவித்து பதிவு செய்ய வேண்டும் என அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,

எனவே, கடந்த 2012 முதல் 2020-ம் ஆண்டு வரை இருந்த அதே நடைமுறைதான் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவுக் கட்டண உயர்வு என்பது தவறான தகவலாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x