Published : 14 Nov 2017 10:39 AM
Last Updated : 14 Nov 2017 10:39 AM

தண்ணீர் திறக்காததால் காய்ந்துபோன வைகை ஆறு: வானம்பார்த்த பூமியான 1.36 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள்

வடகிழக்கு பருவமழை தொடங்கி இரண்டு வாரங்களாகிவிட்டபோதும், வைகை அணை நீர்பிடிப்பு பகுதியில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. அதன் காரணமாக ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் விளைநிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் காய்ந்துபோய் உள்ளன.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும்தான் கனமழை பெய்து வருகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டைபோல் இந்த ஆண்டும் பருவமழை ஏமாற்றி வருகிறது.

தற்போது, பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வரத்தால் வைகை அணை நீர்மட்டம் 58.33 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து வைகை அணையில் இருந்து பெரியாறு பாசன கால்வாயில் 45 ஆயிரம் ஏக்கர் இரு போக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், வைகை அணையில் இருந்து வைகை ஆற்றில் இதுவரை தண்ணீர் திறந்துவிடப்படாததால் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் வைகை ஆற்று பாசன நிலங்கள் வானம்பார்த்த பூமியைப்போல் மாறிவிட்டன.

வைகை அணைக்கு முல்லை பெரியாறு அணையில் இருந்தும், மேல் வைகை, தேனியாறு, சுருளியாறு உள்ளிட்ட வைகை நீர்பிடிப்பு வடிநிலங்களில் இருந்தும் தண்ணீர் வரும். பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரை காட்டிலும் கூடுதலாக வைகை அணைக்கு தண்ணீர் வந்தால் அது வைகை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையாக எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், தற்போது பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர்தான் வைகை அணைக்கு வருகிறது. வைகை நீர்பிடிப்பு பகுதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீர்கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வைகை -பெரியாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் டி.சுப்பிரமணியன் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தற்போதுவரை வைகை நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யவில்லை. அதனால், மேல் வைகை, தேனியாறு, சுருளியாறு வைகை நீர்பிடிப்பு வடிநிலங்கள் வரை 20 கி.மீ. தூரம் காய்ந்துபோய் உள்ளன. அதேபோல், வைகை அணைக்கு கீழே வரட்டாறு, நாகலாறு, வராகநதி, சிறுமலையாறு, மஞ்சளாறு, சாத்தையாறு, உப்பாறு, கீழ் வைகையிலும் மழை இல்லை என்றார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு..

டி.சுப்பிரமணியன் மேலும் கூறுகையில், வைகை அணையில் தற்போது 1,316 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கிறது. இந்த தண்ணீர் 1,500 மில்லியன் கன அடியாக உயர்ந்தால் மட்டுமே வைகை ஆற்றில் திறந்துவிட முடியும். அதற்கான வாய்ப்பு தற்போதைக்கு இல்லை. ஆற்றில் தண்ணீர் திறப்பது வடகிழக்கு பருவமழையை பொறுத்தது. மீறி திறந்தால் கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் போகாது. அதனால், எந்த பயனும் இல்லை. வைகை அணையில் இருந்து விவசாய பாசனத்துக்கு கடைசியாக 2015-ம் ஆண்டு வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதன்பிறகு வைகை ஆற்றில் பாசனத்துக்கு திறக்கப்படவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x