Published : 07 Aug 2023 04:15 PM
Last Updated : 07 Aug 2023 04:15 PM

தமிழகத்தில் ‘இந்திர தனுஷ் 5.0’ தடுப்பூசி திட்டம் 3 சுற்றுகளாக செயல்படுத்தப்படும்: மா.சுப்பிரமணியன் தகவல்

இந்திர தனுஷ் தடுப்பூசி 5.0 - 2023 முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை: "தமிழகத்தில் 2023-ம் ஆண்டு, தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம் மூன்று சுற்றுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்து. முதல் சுற்று 07.08.2023 முதல் 12.08.2023 வரையிலும், இரண்டாம் சுற்று 11.09.2023 முதல் 16.09.2023 வரையிலும், மூன்றாம் சுற்று 09.10.2023 முதல் 14.10.2023 வரையிலும், ஒவ்வொரு சுற்றும் 6 நாட்கள் நடத்தப்படவுள்ளது" என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுபட்ட தடுப்பூசி தவணைகள் செலுத்தும் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் 5.0 - 2023-ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: தமிழகத்தில் 1985-ம் ஆண்டு முதல் நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் 11 வகையான தடுப்பூசிகள் (13 Antigens) அளிப்பதன் மூலம் 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 9.16 லட்சம் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டு வருகிறது.கடந்த 2014 முதல் 4 கட்டங்களாக நடைபெற்றுள்ள தீவிர மிஷன் இந்திர தனுஷ் திட்டத்தின் மூலம் 1,72,365 கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 6,94,083 குழந்தைகளுக்கு 2,98,123 முகாம்களின் மூலம் விடுபட்ட தடுப்பூசி தவணைகள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2023-ம் ஆண்டு தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டம் மூன்று சுற்றுகளாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்து. முதல் சுற்று 07.08.2023 முதல் 12.08.2023 வரையிலும், இரண்டாம் சுற்று 11.09.2023 முதல் 16.09.2023 வரையிலும், மூன்றாம் சுற்று 09.10.2023 முதல் 14.10.2023 வரையிலும், ஒவ்வொரு சுற்றும் 6 நாட்கள் நடத்தப்படவுள்ளது.தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய் (Measles and Rubella) ஒழிப்பதற்கு ஒரு முக்கிய செயலாக கர்ப்பிணி தாய்மார்களுக்கும் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் விடுபட்ட, தவறிய தடுப்பூசி தவணைகளை அளிக்கும் வகையில் தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 செயல்படுத்தப்படும்.

தமிழகத்தில் 15-07-2023 முதல் 31-07-2023 வரை விடுபட்ட, தவணை தவறிய 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோரை கண்டறிய வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. அதில் 72,760 குழந்தைகளும், 14,180 கர்ப்பிணித் தாய்மார்களும் என மொத்தம் 86,940 பேருக்கு தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.

இத்திட்டத்தில் தட்டம்மை மற்றும் ரூபெல்லா, நிமோனியா மற்றும் FlPV 3–வது தவணை ஆகிய தடுப்பூசிகள் வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். தீவிர மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தில் மூன்று சுற்றுகளிலும் விடுபட்ட, தவணை தவறிய அனைத்து குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் ஆகியோருக்கு செலுத்தப்படும் தடுப்பூசி விவரங்கள் UWIN வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக பிரத்யேகமாக தடுப்பூசி பிரிவில் (Immunization War room) அமைக்கப்பட்டு செயல்பட உருவாக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அனைத்து 11 வகையான தடுப்பூசிகளும் போதிய அளவில் கையிருப்பில் உள்ளன. குறிப்பாக தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசிகள் 10.85 லட்சம் டோசஸ் கையிருப்பில் உள்ளன” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x