Published : 07 Aug 2023 05:16 AM
Last Updated : 07 Aug 2023 05:16 AM

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை - மத்திய அமைச்சருக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் பதில்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிய பின்னர், இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகருக்கு, அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கர்நாடக அரசு கடந்த 2 மாதமாக தமிழகத்துக்கு உரிய நீரை வழங்கவில்லை. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மத்திய நீர்வளத் துறை அமைச்சரை நான் இருமுறை நேரில் சந்தித்து, நிலைமைகளை விளக்கியுள்ளேன்.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கூறும் அதிகாரம், காவிரி மேலாண்மை வாரியத்துக்குத்தான் உண்டு. அந்த வாரியம் கூட்டிய கூட்டங்களில், தமிழக நீர்வளத் துறைச் செயலர் சந்தீப் சக்சேனா பங்கேற்று, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்குமாறு கர்நாடகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனாலும், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை முழுமையாக செயல்படவில்லை. எந்தெந்த மாதங்களில், எவ்வளவு நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. நீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நீரைப் பகிர்ந்து கொள்வதை ‘Pro Rata Basis’ என்று குறிப்பிடுவர். அந்தப் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை மேற்கொள்ளவில்லை.

இந்த வாரியம் மத்திய அரசின் கீழ் இயங்குகிறது. எனவேதான், தமிழகத்துக்கு தண்ணீரைத் திறந்துவிட கர்நாடகத்தை அறிவுறுத்துமாறு வாரியத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

முதல்வர் எழுதிய கடிதம்: இது தொடர்பாக முதல்வர் எழுதிய கடிதத்துக்கு, பிரதமர் அலுவலகமோ, மத்திய நீர்வளத் துறை அமைச்சரோ பதில் அளிக்காத நிலையில், மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், "கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி, தமிழகத்தில் திமுக ஆட்சி, இரண்டும் ஓர் அணியில் இருக்கிறார்கள். ஏன் பிரச்சினையை நேரில் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது?" என்று தெரிவித்திருக்கிறார்.

ஒன்றிய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கு, காவிரி பிரச்சினையின் முழு விவரம் தெரியவில்லை. 1967 முதல் 1990 வரை இந்தப் பிரச்சினை குறித்து பேசியும் எந்த முடிவும் எட்டாததால்தான், மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தை அமைத்தது.

காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி, உச்ச நீதிமன்றம் சில திருத்தங்களோடு தீர்ப்பு வழங்கிவிட்ட பின்னர், இரு மாநிலங்களிடையே பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை.

தோழமையாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவரவர் உரிமையை நிலைநாட்டுவதில் இருதரப்பும் உறுதியாக இருப்பார்கள். இது தெரியாமல் மத்திய இணை அமைச்சர் அறிக்கை விட்டிருப்பது, வேடிக்கையாக உள்ளது.

குழம்பிப் போயுள்ள ஓபிஎஸ்: பேச்சுவார்த்தைக்கே இடமில்லை என்ற நிலையில்தான், நடுவர் மன்றத்தை அணுகி தீர்ப்பு பெற்றுள்ளோம். இந்த தீர்ப்பில் ஏதாவது பிரச்சினை என்றால் உச்சநீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர, மீண்டும் கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறக்கூடாது. இதேபோல, கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளார். அரசியல் பிரச்சினைகளால் ஓபிஎஸ் குழம்பிப்போய் இருப்பதைதான் அவர் அறிக்கை காட்டுகிறது. இவ்வாறு நீர்ப்பாசனத் துறைஅமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x