Published : 01 Nov 2017 09:37 PM
Last Updated : 01 Nov 2017 09:37 PM

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் தமிழக அரசு வழங்கும் விருதுகளை பெற விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள் மற்றும் தமிழுக்கு தொண்டாற்றுகின்றவர்களை சிறப்பிக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற விருதுகளை தோற்றுவித்துள்ளார். அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா வரும் ஜனவரி 15-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திருவிக விருது, கிஆபெ விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட உள்ளன.

எனவே, இந்த விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பவர்கள் தன்விவரக் குறிப்புகளுடன் இரண்டு புகைப்படம், எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியலுடன் அந்நூல்களில் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை - 600008 (தொ.பே.எண்: 044-28190412, 28190413) என்ற முகவரிக்கு வரும் நவம்பர் 30-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x