Last Updated : 05 Aug, 2023 03:32 AM

 

Published : 05 Aug 2023 03:32 AM
Last Updated : 05 Aug 2023 03:32 AM

மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கை

மதுரை: மதுரை கோட்டத்தில் 15 ரயில் நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்த நடவடிக்கை என்று மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் தெரிவித்தார்.

மத்திய அரசு ரயில்வே துறையில் உள்கட்டமைப்பு, பயணிகளின் அனுபவம், வசதிகளை மேம்படுத்துவதற்கான மாற்றத்தை மேற்கொள்கிறது. ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ என்ற திட்டத்துக்கென அடையாளம் காணப்பட்ட ரயில் நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்த நிலையங்களாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் நலனுக்காக பல்வேறு உள்கட்டமைப்பு , மின்மயமாக்கல் திட்டங்களை செயல்படுத்துகின்றனர்.

இந்நிலையில், அமிர்த் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ், 508 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்ய இன்று (ஆக.,5) பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்சிங்கில் அடிக்கல் நாட்டுகிறார். இத்திட்டத்தில் முதல் பகுதியாக தேர்வு செய்யப்பட்ட மதுரை ரயில்வே கோட்டத்தில் பழனி, திருச்செந்தூர், அம்பாசமுத்திரம், விருதுநகர், புனலூர், சோழவந்தான், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், காரைக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராஜபாளையம், பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களிலும் அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று கூறியது: "இத்திட்டத்தில் நீண்டகால அணுகுமுறையுடன், தொடர்ச்சியான அடிப்படையில் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும். நிலையங்களிலுள்ள வசதிகளை மேம்படுத்த ரயில் நிலையத்தின் அணுகு பகுதி, சுற்றுப்பகுதிகள், காத்திருப்புக் கூடங்கள், கழிப்பறைகள், தேவையான லிஃப்ட்/எஸ்கலேட்டர்கள், தூய்மை, இலவச இணைய வசதி, ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு போன்ற திட்டங்களின் மூலம் உள்ளூர் தயாரிப்புகளுக்கான பயணிகள் தகவல் அமைப்புகள், எக்சிகியூடிவ் ஓய்வறைகள், வணிக கூட்டங்களுக்கான அரங்குகள், பூங்காக்கள், நிலைய கட்டிடத்தை மறுவடிமைப்பு செய்து மேம்படுத்துதல், நகரின் இருபுறமும் நிலையத்தை ஒருங்கிணைத்தல், பன்முக ஒருங்கிணைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழலுக்கு ஏதுவான அமைப்புகள், ஜல்லிக்கற்கள் இல்லாத நடைமேடை தண்டவாளங்களை வழங்குதல், சாத்தியக்கூறுகளின்படி ‘ரூப் டாப் பிளாசாக்கள்’ மற்றும் சிட்டி சென்டர்களை உருவாக்குதல் போன்ற மாஸ்டர் பிளான்களைத் தயாரித்து, அவற்றை படிப்படியாக செயல்படுத்தப்படும்.

மேலும், மதுரை கோட்டத்தில் 2ம் கட்டமாக சாத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, கொடைக்கானல் ரோடு, ஒட்டன்சத்திரம், கல்லிடைக்குறிச்சி, செங்கோட்டை, தேனி, மானாமதுரை, சிவகங்கை, உடுமலைப்பேட்டை, நாசரேத், குந்தாரா, கொட்டாரக்கரை, மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களும் தேர்வு செய்யப்படும்" என்றார். உடன் கூடுதல் கோட்ட மேலாளர் டி.ரமேஷ் பாபு, முதன்மை திட்ட மேலாளர் எம். அய்யப்ப நாகராஜா, மூத்த கோட்ட வர்த்தக மேலாளர் ஆர். பி. ரதி பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x