Published : 12 Nov 2017 10:17 AM
Last Updated : 12 Nov 2017 10:17 AM

விரிசல் ஏற்பட்டு மழைநீர் கசியும் அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலகம்: கணினிகள் பழுதால் பொதுமக்கள் கடும் அவதி

அண்ணாநகர் ஆர்டிஓ அலுவலக கட்டிடத்தில் மழைநீர் கசிவதால், ஓட்டுநர் உரிமம் பெறுவது, உரிமத்தைப் புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

சென்னை புதிய ஆவடி சாலையில் அண்ணாநகர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஓ) அமைந்துள்ளது. இங்கு ஓட்டுநர் உரிமம் வழங்குதல், உரிமம் புதுப்பித்தல், வாகனங்களுக்குப் பதிவு எண் வழங்குதல், ஆட்டோ உரிமையாளர்களின் பெயர் மாற்றம், வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. தினமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

பழமையான கட்டிடம்

இந்தக் கட்டிடம் பழமையானது என்பதால், விரிசல் ஏற்பட்டு சேதமடைந்த நிலையில் உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் கட்டிடத்துக்குள் மழைநீர் ஒழுகுகிறது.

இதனால் அங்குள்ள கணினி கள் அடிக்கடி பழுதடைவதால் பணிகள் தடைபடுகின்றன. இதனால், ஓட்டுநர் உரிமம், உரிமம் புதுப்பிப்பு உள்ளிட்ட சேவை பெற வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

சுவர்களில் மழை நீர் கசிவு உள்ளதால் மின்கசிவு ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த கட்டிடத்தைப் புதுப்பிக்க போதிய அளவில் அரசு நிதி ஒதுக்கிய போதிலும், இதுவரையில் எந்தப் பணியும் நடக்கவில்லை. எனவே, கட்டிடம் புதுப்பிக்கும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

அதற்கு முன்பு அருகில் உள்ள புதிய கட்டிடத்தில் மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x