Published : 04 Aug 2023 04:10 PM
Last Updated : 04 Aug 2023 04:10 PM

ஆழ்கடலுக்கு சென்ற குமரி விசைப்படகுகளில் அதிகம் பிடிபட்ட செந்நவரை மீன்கள்!

தடைகாலத்துக்கு பின்னர் கடலுக்கு சென்று திரும்பிய விசைப்படகுகளில் அதிகமாக கிடைத்த செந்நவரை மீன்கள் குளச்சல் மீன்பிடித் துறைமுக ஏலக்கூடத்தில் விற்பனைக்காக பெட்டிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்: குளச்சலில் தடைக் காலம் முடிந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று கரை திரும்பிய விசைப்படகுகளில் செந்நவரை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. கொள்முதல் செய்ய கேரள வியாபாரிகள் வராததால் பாதி விலைக்கு இவை விற்பனையானது. இதனால் மீனவர்கள் கவலை அடைந்தனர்.

கன்னியாகுமரி மேற்கு கடல் பகுதிகளான தேங்காய்பட்டினம், குளச்சல், முட்டம் ஆகிய மீன்பிடித் துறைமுகங்களில் மீன்பிடி தடைக்காலத்தால் கடந்த 31-ம் தேதி வரை இரு மாதம் விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 1,200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக தங்க தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மீன்பிடி தடைக்காலம் கடந்த 31-ம் தேதி நள்ளிரவுடன் முடிவடைந்ததையடுத்து கடந்த 1-ம் தேதி அதிகாலை முதல் 3 மீன்பிடித் துறைமுகங்களில் இருந்தும் விசைப்படகுகள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்கு சென்றன. ஒரு வாரத்தில் இருந்து ஒரு மாதம் வரை ஆழ்கடலில் தங்கி மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிப்பது வழக்கம்.

ஆழ்கடல் பகுதியில் கணவாய்,இறால்,புல்லன் போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும். தடைக்காலத்துக்கு பின்னர் இவ்வகை மீன்கள் அதிகமாக பிடிபடும் என மீனவர்கள் எதிர்பார்த்தனர். இந்த மீன்கள் கேரளா உட்பட பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

இதுதவிர கிளி மீன்கள்,செந்நவரை, நாக்கண்டம் போன்ற மீன்களும் கிடைக்கும். இந்த வகை மீன்களை பற்பசை தயாரிப்பு, மீன் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்வர்.

அதிகம் சிக்கிய செந்நவரை மீன்கள்: கடந்த 1-ம் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்ற குளச்சலை சேர்ந்த விசைப்படகுகளில் 3 விசைப்படகுகள் நேற்று காலை மீன்பிடித் துறைமுகத்தில் கரை திரும்பின. இவற்றில் கிளி மீன்கள் எனப்படும் செந்நவரை மீன்கள் அதிக அளவு கிடைத்தன. குளச்சல் மீன் ஏலக்கூடத்தில் குவித்து வைத்து அவை விற்பனை செய்யப்பட்டன.

வழக்கமாக விசைப்படகுகள் ஒரு வாரத்துக்கு பின்னர் தான் கரை திரும்பும் என்பதால் கேரளா உள்ளிட்ட வெளியூர் வியாபாரிகள் குளச்சல் துறைமுகத்துக்கு வரவில்லை. இதனால் செந்நவரை மீன்களை ஏலம் எடுப்பதற்கு போட்டி இல்லை.

மீனவர்கள் கவலை: 50 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி செந்நவரை மீன்கள் ரூ.2,000-க்கு மட்டுமே விலை போயின. ஆனால் வழக்கமாக இந்த மீன்கள் ரூ.5,000 வரை விற்பனை ஆகும். செந்நவரை மீன்கள் அதிகமாக கிடைத்த போதும் விலை குறைவாக இருந்ததால் மீனவர்கள் கவலை அடைந்தனர். விசைப்படகுகள் கரைதிரும்பி வருவதை தொடர்ந்து குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஐஸ் ஆலைகள் மற்றும் மீன் சார்ந்த உபரி தொழில்கள் களைகட்டத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x