Published : 16 Nov 2017 08:02 PM
Last Updated : 16 Nov 2017 08:02 PM

கொளத்தூரில் நகைக்கடையில் 3 கிலோ தங்க நகை திருட்டு: மேற்கூரையில் துளையிட்டு துணிகரம்

கொளத்தூர் ராஜமங்கலத்தில் உள்ள நகை மற்றும் அடகு கடை ஒன்றின் பின் மேற்கூரையில் துளையிட்ட மர்ம நபர் 3 கிலோ தங்கத்தை திருடிச் சென்றுள்ளார்.

பெரம்பூரை அடுத்த, கொளத்தூர் கடப்பா சாலையில் லட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடை உள்ளது. இதன் உரிமையாளர் முகேஷ் குமார். இவர் அடகு கடை மற்றும் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மதியம் உணவு இடைவேளை விடுவதுண்டு.

அப்போது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று சாப்பிட்ட பின்னர் மூன்று மணிக்கு மேல் கடையைத் திறப்பார். இன்றும் வழக்கம் போல் அதே போல் மதிய உணவு இடைவேளைக்கு சென்றவர் மீண்டும் மதியம் 3 மணி அளவில் கடையைத் திறந்த போது கடையில் உள்ள நகைகள் வைக்கப்பட்டிருந்த பகுதிகள் உடைக்கப்பட்டு நகைகள் திருடப்பட்டு பொருட்கள் இறைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

நகைக்கடையின் மேற்கூரையில் ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு துளையிடப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து முகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த ராஜமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கடையின் மேற்கூரை வழியாக துளையிட்டு கயிறுபோட்டு இறங்கி 3 கிலோ தங்க நகைகளை திருடிச்சென்றது தெரிய வந்தது. போலீஸார் விசாரணையில் சில நாட்களுக்கு முன்னர்தான் மேல் தளத்தை ஒரு நபர் வாடகைக்கு எடுத்து குடிவந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கீழே நகைக்கடையில் திருட வேண்டும் என்ற நோக்கத்துடன் அந்த நபர் மேலே வாடகைக்கு வந்திருக்கலாம் அவர் யார், எந்த ஊர் என்ற விபரங்களை போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x