Published : 01 Nov 2017 10:36 AM
Last Updated : 01 Nov 2017 10:36 AM

எழும்பூர் ரயில் நிலையத்தில் முதியோர் பயன்படுத்தும் வகையில் ‘பேட்டரி கார்’ வசதி விரைவில் விரிவாக்கம: ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரிய உறுப்பினர் உறுதி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் பயன்படுத்தும் வகையில் பேட்டரி கார் வசதி விரைவில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

தமிழகத்தின் ரயில் நிலையங்களில் சென்ட்ரலுக்கு அடுத்து சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களுக்கு இங்கிருந்துதான் விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதுதவிர, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, மேற்கு வங்கம், ஒடிசா என வெளி மாநிலங்களுக்கும் எழும்பூர் வழியாக பல்வேறு விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையமாக உள்ளது. ஆனால், போதிய அளவில் பயணி களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, முதியோர், மாற்றுத்திறனாளிகள் நடைமேடைக்குச் செல்ல ‘பேட்டர் கார்’ போதிய அளவில் இல்லாமல் இருக்கின்றன. இதனால் அவர்கள் அவதிப்படுகின்றனர்.

5, 6, 7, நடைமேடைகளுக்கு...

இதுதொடர்பாக ரயில் பயணிகளின் வசதி கள் மேம்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் ஆசிர்வாதம் ஆச்சாரி கூறும்போது, ‘‘பயணி கள் தரப்பில் தொடர்ந்து இந்த புகார் வந்து கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ரயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். எனவே, எஞ்சியுள்ள 5, 6, 7, நடைமேடைகளுக்கு ‘பேட்டரி கார்’ செல்லும் வசதி இன்னும் 2 நாட்களில் விரிவாக்கம் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்’’ என்றார்.

ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் தற்போது 1 - 4-வது நடைமேடை வரையில் பேட்டரி கார்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, 5, 6, 7 நடைமேடைகளுக்குச் செல்ல பொறியியல் கட்டமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. எனவே, விரைவில் இந்த விரிவாக்க சேவை தொடங்கும். மேலும், 2 புதிய பேட்டரி கார்கள் வாங்கவும் பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x