Published : 21 Nov 2017 09:56 AM
Last Updated : 21 Nov 2017 09:56 AM

திமுக தொடர்ந்த வழக்குகளால் ஆர்.கே.நகர் தேர்தல் தேதிஅறிவிப்பதில் தாமதம்: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் முறையீடு

போலி வாக்காளர் நீக்கம் மற்றும் பணப்பட்டுவாடா தொடர்பாக நடவடிக்கை எடுத்த பிறகே ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென திமுக தொடர்ந்த வழக்குகளால் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாகவும், எனவே இந்த வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் நேற்று தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டது.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவிருந்த இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இடைத்தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில், வரும் டிச. 31-க்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே ஆர்.கே.நகரில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டுமென திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடர்ந்துள்ளார். இதேபோல, இந்த தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வருமான வரித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்த பிறகே தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட வேண்டுமென திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷூம் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில், இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “திமுக தொடர்ந்துள்ள இந்த 2 வழக்குகள் காரணமாக தேர்தல் தேதியை உடனடியாக அறிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும்’’ என முறையீடு செய்தார்.

அதையேற்ற நீதிபதிகள் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x