Published : 30 Jul 2023 06:50 PM
Last Updated : 30 Jul 2023 06:50 PM

தமிழக அரசுக்கு பனை மரத்தின் மீது கவனம் இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

ராமநாதபுரத்தில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது பொதுமக்களிடையே உரையாற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

ராமநாதபுரம்: "அரசுக்கு பனை மரத்தின் மீது கவனம் இல்லை. அனைவரும் வெள்ளை சர்க்கரையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டோம். பனங்கருப்பட்டியை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் தொடர் கோரிக்கை. ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டிகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருக்கும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ராமநாதபுரம் மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின்போது, பனை தொழிலாளர்களைச் சந்தித்து அவர் உரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: "தமிழக பொருளாதாரம் பனை மரத்தை சார்ந்திருக்கும் பொருளாதாரம். பனைமரம் சார்ந்த தொழில்களுக்கு எவ்வாறான ஆக்கமும் ஊக்கமும் அரசு கொடுக்க வேண்டும் என்பது தெரிகிறது. பனைமரத்தைப் பொருத்தவரையில் அதன்மூலம் கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் மதிப்புமிக்கவை.

பனையின் ஓலை, பாலை, பதநீர் தொடங்கி, அதன் வேர் வரையில் அனைத்துக்கும் மதிப்பு இருக்கக்கூடிய ஒரே மரம் பனை. அதை பெரிய அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பாஜக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. பாஜக வெள்ளை அறிக்கையின்படி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி வருமானம் இருக்கக்கூடியது பனைமரங்கள்.

இன்றைக்கு அனைத்து இடங்களிலும் கலப்படமான கருப்பட்டிகள் எல்லாம் வர ஆரம்பித்துவிட்டது. எனவே, பனை சார்ந்த தொழிலில் ஈடுபடுபவர்களின் கஷ்டங்களைப் புரிந்து இத்தொழிலாளர்களுடன் அரசு துணை நிற்க வேண்டும் என்பதுதான், பாஜகவின் எண்ணம். கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது.

எப்போது நாம் கள்ளை போதைப்பொருள் எனக்கூறி தடை செய்ய ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பனை மரங்களை வெட்ட ஆரம்பித்துவிட்டனர். இதனால், எந்த இடத்திலுமே பனை மரம் வேண்டாம் என்று கூறுமளவுக்கு வந்துவிட்டது. தமிழகத்திலேயே ராமநாதபுரத்தில்தான், ஒன்றரை கோடி பனை மரங்கள் உள்ளன. இங்கேயும்கூட நிறைய பேர் பனை வேண்டாமென்று கூறிவிட்டனர்.

அப்படியிருக்கும்போது அரசுக்கு பனை மரத்தின் மீது கவனம் இல்லை. அனைவரும் வெள்ளை சர்க்கரையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டோம். பனங்கருப்பட்டியை ரேஷன் கடைகளில் கொடுக்க வேண்டும் என்பது பாஜகவின் தொடர் கோரிக்கை. இதை செய்தாலே, ஒரு பொருளாதார மறுமலர்ச்சி இந்தப் பகுதியில் ஏற்படும்.

ஒரு கிலோ பனங்கருப்படி, ரூ.170-க்கு உற்பத்தி செய்யப்படுகிறது. விற்பனைக்கு வரும்போது ரூ.600 முதல் ரூ.700 வரை விற்கப்படுகிறது. நிறைய இடங்களில் அது கலப்படமா, ஒரிஜினலா என்றுகூட தெரிவதில்லை. ஆனால், அதை கஷ்டப்பட்டு காய்ச்சுபவர்களுக்கு மூன்றில் ஒருபங்குதான் பணம் கிடைக்கிறது. இடையில் கைமாற்றி விடுவர்களுக்கு இரண்டு சதவீதம் சென்றுவிடுகிறது. எனவே, ரேஷன் கடைகளில் பனங்கருப்பட்டி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உறுதியாக இருக்கும்" என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x