Published : 06 Nov 2017 11:52 AM
Last Updated : 06 Nov 2017 11:52 AM

தி.மலை பவழக் குன்று விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவுப்படி நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

திருவண்ணாமலை பவழக்குன்று விவகாரத்தில் நித்யானந்தாவுக்கு எதிராக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறினால் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் அருகே பவழக் குன்று மலை உள்ளது. மலையடிவாரத்தில் பொதுமக்கள் வீடு கட்டி வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நித்யானந்தாவின் சீடர்கள் பவழக் குன்று மலையில் பல ஏக்கர் இடத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். மேலும், தென்னங்கீற்றால் ஆன ஆசிரமம் அமைத்து, சிலைகள் வைத்து பூஜை செய்தனர்.

இதையடுத்து, கடந்த ஜூன் மாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பவழக் குன்று பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட மலையை நித்யானந்தா ஆக்கிரமிக்க முயன்றதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், காவல் துறையினரின் பாதுகாப்புடன் பவழக் குன்றிலிருந்த நித்யானந்தா சீடர்களை கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமையில் வருவாய்த் துறையினர் அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில், பவழக் குன்று தொடர்பாக தாக்கல் செய்யப்படும் மனு மீதான விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறி, தி.மலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நித்யானந்தா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

அப்போது, கேவியட் மனுவில் உள்ள நித்யானந்தாவின் கையொப்பத்தின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால், இதுகுறித்து விசாரிக்க மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கேவியட் மனு மற்றும் சொத்து விவரம் குறித்த சரி பார்த்தல் மனுவில் நித்யானந்தா கடந்த மாதம் 19-ம் தேதி போட்டுள்ள கையொப்பத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினர் வீரபத்திரன் கூறும்போது, “பவழக் குன்று மலையை தனக்கு சொந்தம் என்று நித்யானந்தா கூறி வருகிறார்.

இதுதொடர்பாக, அவர் தாக்கல் செய்துள்ள கேவியட் மனுவில் இடம்பெற்றுள்ள அவரது கையொப்பத்தின் மீது நீதிமன்றம் சந்தேகம் எழுப்பிள்ளது.

நீதிபதியின் உத்தரவின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, நித்யானந்தா மீது நடவடிக்கை வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஜனநாயக அமைப்புகளை ஒன்று திரட்டி தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x