Published : 26 Jul 2023 04:05 PM
Last Updated : 26 Jul 2023 04:05 PM

செயலிழந்த கிணறுகள், குவாரிகளில் பாதுகாப்பு நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு

கைவிடப்பட்ட குவாரிகள் | கோப்புப் படம்

சென்னை: தமிழகம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவற்றினைக் கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட,செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குவாரி குழிகள் ஆகியவை மனிதர்கள், விலங்குகள் மற்றும் குறிப்பாக நமது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக சமீபகாலமாக சில உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் தங்களது மாவட்டத்திலுள்ள பராமரிப்பின்றி கைவிடப்பட்ட மற்றும் செயலிழந்த திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கட்டுமானப் பள்ளங்கள் மற்றும் குவாரி குழிகளை கள ஆய்வு செய்து கண்டறிந்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இப்பொருள் தொடர்பாக மாவட்டங்களிலுள்ள கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும். தொடர்புடைய நிலத்தின் புல எண்கள் அதனுடைய அளவு மற்றும் தொடர்புடைய முக்கிய தகவல்களையும் சேகரிக்க வேண்டும். அதே போன்று திறந்த கிணறுகள் மற்றும் போர்வெல்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக இப்பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் அணுகாத வண்ணம் உறுதியான உயரத்தில் பராபெட் சுவர்கள் எழுப்பபட்டுள்ளதை உறுதி செய்தல் வேண்டும்.

குவாரி குழிகளால் ஏற்படும் அபாயத்தினை உணர்ந்து, குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இது போன்ற குவாரி குழிகளில் தேங்கி உள்ள நீரில் குளிப்பதனால் ஏற்படும் விபத்தைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குத்தகை காலம் முடிந்து செயல்பாடின்றி உள்ள குவாரி குழிகளை உரிய வேலி அமைத்து பாதுகாக்க சம்மந்தப்பட்ட குத்தகைதாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.மேலும் இந்த பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள பசுமை நிதி (Green Fund) மற்றும் மாவட்ட கனிம நிதியைப் (District Mineral Fund) பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதே போல சாலைகளில் செல்பவர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு, சாலைப் பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் குழிகள் மற்றும் பள்ளங்களை உரிய வலுவான பாதுகாப்பு தடுப்புகளை நிறுவ வேண்டும். மேலும் எச்சரிக்கை பலகை மற்றும் எதிரொளிப்பான் (Reflectors) அமைக்க வேண்டும். மேலும் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் 11.02.2010 மற்றும் 06.08.2010 –ம் நாளிட்ட தமது ஆணையில் தெரிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாக பின்பற்றி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு வலியுறுத்தப்படுகிறது.

இப்பணிகளை திறம்பட செயல்படுத்திட மாவட்ட ஆட்சியர்கள் தலைமையின் கீழ் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து இப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

எனவே, கைவிடப்பட்ட திறந்தவெளி கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் கைவிடப்பட்ட குவாரி குழிகளை கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய செயல் திட்டத்தை அரசுக்கு அறிக்கையாக 25.08.2023-க்குள் அளிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்குறிப்பிட்ட அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் 30.09.2023-க்குள் முடிக்க வேண்டும்" என்று அந்த உத்தரவில் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x