Published : 26 Jul 2023 04:02 PM
Last Updated : 26 Jul 2023 04:02 PM

சென்னையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 600 மார்ஷல்கள்: காவல் துறை தகவல்

பயிற்சி முகாம்

சென்னை: சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பணியில் ஈடுபடவுள்ள போக்குவரத்து மார்ஷல்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "சென்னை போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து மேலாண்மை என்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. சென்னையில் நாளொன்றுக்கு 60 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வருகின்றன. இவ்வாறு பயன்பாட்டுக்கு வரும் வாகனங்களாலும், தற்போதுள்ள வாகனத்தாலும் போக்குவரத்தை மேலும் பாதிப்புள்ளாக்கி வருகிறது. மேலும் சென்னை பெருநகரங்களில் சிஎம்ஆர்எல் நிறுவனம் மெட்ரோ பாதை கட்டுமானத்தை, நிறைவு செய்ய அதன் 2வது கட்ட கட்டுமான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு நடைபெறும் சிஎம்ஆர்எல் பணி காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களின் அளவு மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அப்பணி நடைபெறும் சாலைகளில் செல்ல முடிகிறது.

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சிஎம்ஆர்எல் நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் கட்டுமானக் குழுவால் சாலைப் போக்குவரத்து மார்ஷல்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்களை போக்குவரத்தை சீர்செய்யும் பணிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் முயற்சியில் போக்குவரத்து காவல் துறையினருக்கு உதவியாக சுமார் 600 பேர் போக்குவரத்து மார்ஷல்கள் பணிக்காக ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்ட மார்ஷல்களுக்கு போக்குவரத்து விதிமுறை குறித்து பயிற்சி அளிக்குமாறு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் அளித்த அறிவுறுத்தலின்படி அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது சென்னை பெருநகர காவல், புனித தோமையார்மலை, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சியில் உள்ளவர்களை தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு முதல் தொகுதியில் உள்ள 52 போக்குவரத்து மார்ஷல்களுக்கு, புனித தோமையார் மலை, போக்குவரத்து உதவி ஆணையாளர், திருவேங்கடம் மற்றும் அவரது குழுவினர் பயிற்சி அளித்தனர். இப்பயிற்சியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கும் மற்றும் ஆம்புலன்ஸ்கள் கடந்து செல்ல அனுமதிப்பது மற்றும் சாலையைப் பயன்படுத்துபவர்களுடன் எவ்வாறு கண்ணியமாக நடந்துகொள்வது என்பது குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, பணியில் இருக்கும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்றும், மாலை நேரங்களில் ஒளிரும் மேலாடை (Reflective Jacket) அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இவர்கள் அனைவருக்கும் இன்னும் சில நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் போக்குவரத்து மார்ஷல்களால் வாகனப் போக்குவரத்தை திறம்பட நிர்வாகிப்பதற்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் மற்றும் போக்குவரத்து காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x