Published : 26 Jul 2023 04:59 AM
Last Updated : 26 Jul 2023 04:59 AM

கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரியர் சங்கங்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சென்னை: பழைய ஒய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தை நடத்தியது.

பழைய ஒய்வூதியத் திட்டம், ஊக்க ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஆசிரியர் சங்கங்களை பள்ளிக்கல்வித் துறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதற்கான முதல்கட்ட கூட்டம் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக்கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

22 சங்கங்கள்: இதில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் (டிஎன்-ஜாக்டோ) உள்ள 22 சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் டிஎன் ஜாக்டோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப் பாளர் கு.தியாகராஜன் பேசியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் உள்ளஊதிய முரண்பாடுகளை களைதல், மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் ஆசிரியர்களுக்கும பணிபாதுகாப்புச் சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உட்பட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளோம்.

பழைய ஒய்வூதியம் உட்பட தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுள்ளது’’என்றார். இதேபோல், இதர ஆசிரியர் சங்கங்களுடனும் அடுத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x