Published : 25 Jul 2023 03:41 PM
Last Updated : 25 Jul 2023 03:41 PM

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பிளஸ் 1 துணைத் தேர்வு: தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பு

கோப்புப்படம்

சென்னை: தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மூன்று வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள் துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கும் தேர்வு நடத்தக் கோரி, மாணவர்கள் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் சார்ந்தது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் கேந்திரிய வித்யாலயாவில் 11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு ஒருமுறை நடவடிக்கையாக மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்று பெறுவதற்காகவே உயர் நீதிமன்ற உத்தரவின்வின்படி குறிப்பிட்ட ஒரு மாணவிக்கு மட்டும் 2018-ம் அண்டு துணைத் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டது. எனவே, அந்த உத்தரவு இந்த வழக்கிற்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்குத் துணைத் தேர்வு எழுத அனுமதியில்லை என விதிகள் உள்ளது. இது தொடர்பாக தனி நீதிபதியிடம் தெரிவித்த நிலையில், அதனை ஏற்காமல் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். எனவே, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அனைத்து பாடங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என கேந்திரிய வித்யாலயா விதிகள் உள்ளது. எனவே, 11ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x