Published : 13 Nov 2017 09:35 AM
Last Updated : 13 Nov 2017 09:35 AM

வீடு வாங்க முன்பணம் கட்டியவரிடம் பிடித்தம் செய்த ரூ.1 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும்: கட்டுமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை முகப்பேர் (கிழக்கு) பகுதியைச் சேர்ந்த பி.தேவேந்திரன், டி.சுதா ஆகியோர் சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தேனாம்பேட்டையில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனம் கட்ட இருந்த அடுக்குமாடி குடியிருப்பின் விளம்பரங்களைப் பார்த்து, அதில் ஒரு குடியிருப்பை வாங்க நாங்கள் முன்பதிவு செய்தோம்.

இதற்காக கடந்த 2008 டிசம்பர் 21-ம் தேதி ரூ.4 லட்சத்தை கட்டுமான நிறுவனத்திடம் முன்பணமாகச் செலுத்தினோம். குடியிருப்பை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டபோது, ‘குடியிருப்பைக் கட்ட அனுமதிகோரி விண்ணப்பித்து உள்ளோம். விரைவில் அனுமதி கிடைத்தவுடன் 2009 ஜூன் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி விடுவோம்’ என கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள் கூறியபடி கட்டுமானப் பணியைத் தொடங்கவில்லை. அதன்பிறகு, கடந்த 2011 ஜூலை 21-ம் தேதி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கட்டுமான நிறுவனத்தினர், முன்பதிவை ரத்து செய்து விட்டதாகக் கூறி ரூ.2.99 லட்சத்துக்கு காசோலையையும் இணைத்திருந்தனர்.

சேவை குறைபாடு

ஆனால், முன்பதிவை ரத்து செய்ததற்கு ரூ.1 லட்சத்தை பிடித்தம் செய்து கொண்டனர். பின்னர், பிடித்தம் செய்த ரூ.1 லட்சத்தை திருப்பி அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பினோம். அந்தத் தொகையை திருப்பித் தருவதாகத் தெரிவித்த கட்டு மான நிறுவனத்தினர், தொகையைத் திருப்பி அளிக்கவில்லை. எனவே, கட்டுமான நிறுவனத்தின் சேவை குறைபாடு, எங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை மாவட்ட (தெற்கு) நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் தலைவர் எம்.மோனி, உறுப்பினர்கள் கே.அமலா, டி.பால்ராஜசேகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கட்டுமானப் பணிகள் தொடங்கியது தொடர்பாக எந்த வித ஆதாரத்தையும் காட்டாமல் மனுதாரர்களிடமிருந்து ரூ.1 லட்சத்தை முன்பதிவு ரத்து கட்டணமாக பிடித்தம் செய்தது சேவை குறைபாடாகும்.

மன உளைச்சலுக்கு இழப்பீடு

எனவே, ரூ.1 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் கட்டுமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும். அதோடு, மனுதாரர்களின் மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.20,000 மற்றும் வழக்குச் செலவாக ரூ.5 ஆயிரத்தையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x