Published : 22 Jul 2023 03:17 PM
Last Updated : 22 Jul 2023 03:17 PM

மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை அமைச்சர்கள் பார்வையிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

அமைச்சரவைக் கூட்டம்

சென்னை: மகளிர் உரிமைத் திட்ட முகாம்களை அமைச்சர்கள் பார்வையிட வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "மகளிர் முன்னேற்றத்தில் பெரும் பாய்ச்சலாக அமையவுள்ள கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் சுற்றியே என் எண்ணங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மகளிர் ஒருவர்கூட விடுபடாமல் இந்தத் திட்டம் போய்ச் சேர வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது.

தமிழக மகளிரின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ம் ஆண்டு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட அதே தருமபுரி மண்ணில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கான முகாமை வரும் திங்கட்கிழமை (24-07-2023) தொடங்கி வைக்கிறேன். தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களை அமைச்சர்கள் அனைவரும் சென்று பார்வையிட வேண்டும் என இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளேன்.

கலைஞர் 100-இல் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டம், ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய திட்டம் மட்டுமல்ல; பல தலைமுறைகளைத் தாண்டியும் பயனளிக்கக் கூடிய திட்டமாக விளங்கும் என எண்ணித் துணிகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x